தொலைந்துபோன கனவின் கவிதை

எத்தனையோ
கனவுகளை
நான் தொலைததுண்டு..!!

தொலைந்த இடம்
வெகு தொலைவுதான்..!!

தொலைத்தது
வெறும்
கனவுகள் என்பதால்
பலவற்றை
என்னால்
அந்த காலத்தின்
பின் சென்று
வெட்டி எடுத்து
வர முடிகின்றது..!!

அந்த
ஏக்கங்கள்
என்னுள் இன்னும்
அதே வண்ணத்தில்
இருப்பது
நம்பமுடியாத உண்மை..!!

என் சரித்திரத்தில்
நான்
எழுத முடியாத
அத்யாயங்கள்
அந்த பல
நிறைவு பெறாத கனவுகள்..!!

காலம் கடந்தபின்
திரும்பிப் பார்த்ததில்
பல கனவுகள்
வெறும் கனவுகளாகவே
கிடப்பது தெரிகின்றது..!!

கடந்து வந்த
பாதைகளின் ஓரத்தில்
அதன் பூக்கள்
கேட்பாரற்று
மலர்ந்தபடியே
உறைந்து கிடக்கின்றன..!!

அந்தந்த
பருவத்துக் கனவுகள்
அந்தந்த தடத்திலேயே
அத்தனை அழகான
கனவுகள்
அதே அழகுடன்..!!

சில
கனவுகளின் வழி
நான் நடந்து வந்தவன்
என்றாலும்
பல கனவுகளை
சிதறவிட்டு வந்தவனும் நானே..!!

ஒரு கனவு
மெய்ப்படும் பொழுது
மற்றொன்று
கைவிட்டுப் போவது
சமன்பாட்டு முரண்..!!

சில கனவுகள்
எட்டாத கனியாகிவிட்டன
சில.. சிலரால்
நசுக்கப் பட்டுவிட்டன..!!

சிலவற்றை
போராடி வென்றதுண்டு
சில கனவுகள்
என்னுளே மறைந்து
புதைந்து போனதுண்டு..!!

இந்த
வாழ்க்கையை
வடிவமைத்த கனவுகள் பல..!!

வாழ்க்கையின்
ஓர் அங்கமாய்
இருக்க
முடியாமல்
போனது பற்பல..!!

இருந்தும்
அந்த கனவுகள்
இல்லையேல்..
இன்று
இந்த நிலையினில்
நான் இல்லை..!!

இன்றும்
சில கனவுகளுக்கு
உயிர் இருப்பதை
நான் உணர்கின்றேன்..!!

இந்த
கவிதையும்
ஒரு
தொலைந்துபோன
கனவின்
கவிதையாக இருக்கலாம்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (20-Apr-14, 7:20 am)
பார்வை : 295

மேலே