பருவ விளையாட்டு

அம்மா அப்பாவுக்குச்
செல்லப் பிள்ளைநான்.
சும்மா இருப்பதுவே
நான்செய்யும் வேலை.
பள்ளிப் பருவத்திலும்
படிப்பில் நாட்டமில்லை

கல்லூரி வாழ்க்கையிலும்
கல்லாமல் கற்றவன்நான்.
கால்கிழவன் ஆனபின்பு
இளங்கலையில் தேறினேன்
பகுத்தறிவைப் பெருக்காதே
பட்டதாரி ஆகினேன்.

பிள்ளைப் பருவத்திலே
பெற்ற அன்னையிடம்
கள்ளத் தனத்தையெல்லாம்
கசறக் கற்றவன்.
தெருவோரப் பேச்சில்
தேர்ந்த என்அன்னை
குருவாகி உலகறிவை
தினமெனக்கு ஊட்டுவாள்.

ஒட்டுக் கேட்பதற்கு
உள்ளபல வழிகளையும்
கட்டுப்பா டில்லாமல்
கற்றெனுக்குக் கொடுப்பாள்.
வெட்டிப் பேச்சில்
வேங்கை ஆனவள்.

விளையாட்டாய் வாழ்க்கையை
விளையாடச் சொல்லுவாள்.
ஊர்வம்பு பேசுவதில்
ஈடிணை இல்லாதவள்
வேர்விட்டு வளருமிவள்
பரப்புகின்ற வதந்திகள்.

சுற்றியுள்ள வீடுகளில்
குடியிருக்கும் பெண்களில்
கற்றவரின் மனைவியே
எங்களுக்குப் பகைவர்.
அரைகுறையாய்ப் படித்த
ஆடவரின் மனைவியரே
நிறைகுடமாய் என்தாயின்
தலைமையை ஏற்றவர்.

எழுதப்படிக்க மட்டும்
தெரிந்தஎன் அன்னையைப்
போற்றுகின்ற தொண்டரிவர்.

தந்தை இல்லத்தில்
இருப்பதே தெரியாது
மந்தை ஆடுபோல்
தன்வேலை அவர்பார்ப்பார்.
அன்னை வைத்ததுதான்
என்வீட்டில் சட்டம்.

எனைத்தவிர வேறெவரும்
வாய்திறக்க மாட்டார்!
நானெது செய்தாலும்
அவளுக்கு மகிழ்ச்சி
ஊணோடு ஊக்கத்தையும்
ஊட்டிஎனை வளர்ப்பாள்.


பால்வேறு பாட்டைநான்
புரிந்திட்ட நாள்முதலாய்
பார்த்திடுவேன் எண்திசையும்
பாவையரை மட்டுமே!
கால்நோக நிற்பேன்
கடும்பனிக்கும் அஞ்சேன்.

கத்திரி வெய்யிலும்
மென்தென்றல் ஆகும்.
எங்கேனும் ஒருத்தி
என்கண்ணில் பட்டால்
இதுவொன்றோ இன்பம்
எனக்கேது துன்பம்.

பார்வையில் நாள்தோரும்
பலபேரைச் சுவைப்பேன்
கற்பனைத் தேரேறி
விண்ணுலகில் பறப்பேன்!
நானெழுந்த பின்னே
செங்கதிரும் புலரும்

நாவெல்லாம் நீர்சுரக்க
மொட்டைமாடி செல்வேன்
ஆறோ அறுபதோ
பெண்ணா யிருந்தால்சரி;
சீறுமென் இளமைக்கு
விருந்தாக இனிப்பாள்.

பார்வையில் சுகத்தை
அணுவணுவாய்க் குடித்து
கோர்வையாய் என்நெஞ்சில்
அதைப்பிடித்து நிறுத்தி
கும்மாளம் அடிப்பதே
நான்செய்யும் வேலை.

கன்றீந்த பசுவிடந்தான்
பால்கறக்க முடியும்;
கனிந்திட்ட பழத்தில்தான்
தேன்சுவையும் கிடைக்கும்.
எனக்கதுப்போல் கிடைத்தாளே
மணமான ஒருத்தி
எட்டியப்பன் என்பவனின்
கனமான மனைவி.

ஆஞ்சநேயப் ப்ரியா
அவள்கொண்ட பெயராம்
வாஞ்சையோடு எனைப்பார்த்து
முறுவலித்து நிற்பாள் .

செக்கச் சிவந்த
மேனியவள் கொண்டாள்;
செழுசெழுவென வளர்ந்து
பனைமரம் போலிருப்பாள்.
தைமாதச் சுரைக்காய்போல்
முகஅழகு கொண்டாள்
தவறாமல் சித்தானை
நடைபோட்டு வருவாள்!

அவள்கணவன் பெரும்பாலும்
வெளியூரில் இருப்பான்
இதனாலே அவளுக்கு
நானே துணையாவேன்.
அவனிருக்கும் போதும்நான்
நட்புடனே செல்வேன்

அவன்என்னை எப்போதும்
மகிழ்வோடு அழைப்பான்.
அதுபோதும் அவளோடு
என்நட்பு தொடர.

எதிர்எதிராய் வீடுகளில்
குடியிருக்கும் நாங்கள்
புதிர்போட்டு விளையாடி
பொழுதினைக் கழிப்போம்!
கைச்சாடை காட்டி
கண்சிமிட்டிப் பார்த்து
மைவிழியாள் பேராழகை
மனதாரக் குடிப்பேன்.

காதலன்போல் அருகிருந்து
கைபிடித்து இழுத்தாலும்
போதுமென்று ஒருபோதும்
அவள்சொல்ல மாட்டாள்.

எங்களின் நெருக்கம்பற்றி
எட்டியப்பன் அறிவான்.
பொங்கிடும் அவன்மனம்
பூரித்துப் போவான்.
தவறென்று எம்உறவை
அவன்சொல்ல மாட்டான்

தவறாது உடனிருந்து
பாராட்டி மகிழ்வான்.
எனக்கும் அவளுக்கும்
நான்முழுதும் வேலை
கணக்கு வழக்குஎல்லாம்
வீட்டிற்கு வெளியேதான்.

கும்மாளச் சிரிப்போடு
கைகொட்டி கண்ணடித்து
எமக்குப் பிடிக்காதவரை
ஏளனமாய்ப் பார்ப்போம்.

எம்பகைவர் வீடுகளில்
ஜன்னல் கதவெல்லாம்
எப்போதும் திறவாமல்
மூடியே கிடக்கும்.

கொண்டாட்டம் எங்களுக்கு;
குதிநடை போட்டு
கொலுவிருப்போம் நாங்கள்
அந்த வீடுகளைச்சுற்றி.

சண்டை சச்சரவுகள்
சொந்த விஷயங்கள்
எல்லாம் எம்செவிகளில்
தேனாறாய்ப் பாயும்!
கல்லாது போனதற்கு
கிடைத்திட்ட பரிசுஇது.

ஒட்டுக் கேட்பதிலே
வருகின்ற பேரின்பம்
வெட்டிப் பேச்சுக்கு
வித்தாக அமையும்.

வேலைவெட்டி இல்லாமல்
காலைமுதல் நள்ளிரவுவரை
கழித்திடுவேன் என்பொழுதை
என்அருமைத் தோழியுடன்.

செங்கமலம் என்றே
என்சிங்காரியை அழைப்பேன்.
இனிப்பாகும் எந்நாவும்
அவள்பெயரைச் சொன்னாலே!
காதலர்போல் பழகினாலும்
தவறொன்றும் செய்யோம்

கைப்பிடித்து இழுப்பதும்
கண்ணடித்துச் சிரிப்பதும்
எங்களுக்கு விளையாட்டே
வேறொன்று மில்லை!

நாள்முழுதும் அலைந்து
திரட்டிய செய்திகளை
வான்கோள் போலிருக்கும்
என்அன்னைக்குக் கொடுத்தால்
வகைவகையாய் அவற்றை
பிரித்து உரித்து
பகையாக நிற்போர்க்கு
எதிராகப் பேசுவாள்.

தொண்டை புண்ணாகி
உதிரமே கொட்டினாலும்
கெண்டை மீன்போல
துள்ளிக் குதித்தபடி
தொண்டர் பட்டாளமெல்லாம்
தொடைதட்டி ஆர்ப்பரிக்க
மண்டைபிளக்கும் குரலில்
வதந்திகளைப் பரப்புவாள்.

வேலைகளைத் தவிர்க்க
நோயாளி என்றுசொல்லி
காலைமுதல் இரவுவரை
ஓய்வெடுத்துக் கொள்வாள்.
எங்கள்வீட்டில் சமையல்
என்றுமே நடக்காது.
எங்களுக்கும் சமையல்கட்டு
ஊரிலுள்ள ஓட்டல்களே.

வதந்திகளைப் பரப்புதற்கு
வகையாக சிரிப்பதற்கு
செய்திகள் கிடைத்துவிட்டால்
சிலிர்த்தெழுவாள் அன்னை
பைநிறையத் தங்கத்தைக்
கண்டவளைப் போல!

ஊர்க்கதை பேசுதற்கு
உயிர்த்தெழுவாள் நாகமாய்;
ஓயாது அவள்வாயும்
பேசிக்கொண்டே இருப்பாள்

இப்படித்தான் எம்பொழுது
இன்பமாய்க் கழியும்
எப்படித்தான் எம்பகைவர்
வாய்மூடிக் கிடக்கிறார்?

என்னுரை கேட்ட
இன்னுயிர் நண்பரே
யாம்பெறும் இன்பம்
நீர்பெற வேண்டுமெனில்,

ஒட்டுக் கேட்க வாரீகளா?
ஊர்க்கதை பேச வாரீகளா?


( 1985. இதில் வரும் சம்பவங்களும் பெயர்களும் எனது கற்பனையின் வெளிப்பாடு. ஒட்டுக் கேட்பவர் மற்றும் வதந்தி பரப்புவோர் பற்றி பலஆண்டுகளாகக் கேட்டறிந்த செய்திகளே இதை எழுதக் காரணமாக அமைந்தது)

எழுதியவர் : மலர் (18-May-14, 5:13 pm)
பார்வை : 112

மேலே