கண்தவம்

அலுவலக கோப்புகள்
அழுத்திய மனசையும்
கணினி களத்தில்
களைத்த கண்களையும்
நெரிசலில் கசங்கிய
நெஞ்சையும், அனுதினம்
பொசுங்கும் வாழ்வையும்
பொதியென சுமந்து
கடற்கரை வந்தேன்
கண்தவம் புரிந்தேன்

கீழ்வானச் சிவப்பில்
லயித்திருக்கும் பிறைநிலவை
கிள்ளி எடுத்துவந்து
கீற்றுக்குள் வைத்தேன்

தொடுவானம் சரிந்து
கடல்வீழும் சங்கமத்தை
அள்ளி எடுத்துவந்து
கீற்றின்பின் விரித்தேன்

சிறகாடி வட்டமிடும்
இரைதேடும் பறவையை
கணப்பொழுது நிற்க சொன்னேன்
பிறைநிலவின் அருகே

உறவாடு உறவாடு
உறவாடு என காற்று
மரத்தோடும் மனதோடும்
விரித்தாடும் சிறகை

கண்சொன்னால் கேட்காதா
கடலலைகள்..? அப்படியே
காட்சியாய் நின்றன
தென்னைக்குப் பின்னே

மனம் சொன்னால் கேட்காதா
உள்ளிருக்கும் வேதனைகள்..?
மெல்ல ஓய்ந்தன
மாலைக்கு முன்னே....! (2013)


(கடவுளின் நிழல்கள் நூலிலிருந்து)

எழுதியவர் : கவித்தாசபாபதி (22-May-14, 3:40 pm)
பார்வை : 103

மேலே