அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர

அரசுப் பள்ளிகளில் தரம் மற்றும் சேர்க்கை அதிகரிக்க...
முன்னுரை :-
“ ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது ”.

என்பதற்கிணங்க அரசுப் பள்ளிகளிலுள்ள பாடத்திட்டமானது கரையான்களால் அரிக்கப்பட்ட நிலையிலுள்ள ஏட்டுச் சுரைக்காயாகத்தான் உள்ளது.
ஆம். இன்றைய அரசுப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் கல்விமுறையானது கழைகள் களையாத நிலையிலுள்ள ஒரு பாரம்பரிய பொருளாக மட்டுமே உள்ளது. ஆகையால், அரசுப் பள்ளிகளில் நீக்க வேண்டிய கழைகளும் புகுத்த வேண்டிய புதுமைகளும் பல உள்ளன. அவைகளை இக்கட்டுரையில் காண்போம்.

களைய வேண்டிய கழைகள் :-

“ வாசத்தை மறுக்கின்ற மலரால் பலனில்லை
மழையை மறுக்கின்ற மேகத்தால் பலனில்லை
பாதையை மறுக்கின்ற சாலையால் பலனில்லை
அறிவை மறுக்கின்ற பாடத்தால் பலனில்லை ”

ஆம். இன்றைய அரசுப் பள்ளிகளில் அறிவை வளர்க்க இயலாத பாடத் திட்டங்கள் தான் நடைமுறையில் உள்ளது.
இன்றைய சூழலில் அரசுப்பள்ளி மாணவர்கள் திருக்குறள், நாலடியார்,பாரதியார் பாடல்கள் எல்லாம், ஒரு விதமான மரபுக் கவிதைகள் என்பது கூட அறியாமல், அவைகளை வெறும் மனப்பாடப்பகுதியாக மட்டுமே படிக்க கூடிய நிலை நீடிக்கிறது.

ஆங்கிலம் என்றொரு மொழி, மொழியாக அன்றி கடினமாக முயற்சி செய்து மதிப்பெண் பெறக் கூடிய பாடமாக மட்டுமே நடத்தப்படுகிறது. மேலும், தகுந்த ஆங்கில மொழித்திறன் அற்றவர்களாலேயே ஆங்கிலப்பாடம் கற்பிக்கவும் படுகிறது.

குடிமக்களாட்சி என்றால் என்ன? என்று, கேள்வி வடிவில் மட்டுமே இருக்கிறதே தவிர, உண்மையில் மாணவர்கள் நாட்டின் முதல்குடிமகன் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார் என்று கூட தெரியாத நிலையில் தான் இருக்கின்றனர்.

திறமையை வெளிக்காட்டும் வாய்ப்புகள், போட்டிகள், பரிசுகள், பாராட்டுகள் போன்ற புத்துணர்ச்சி முகாம்கள் எல்லாம் மூடப்பட்ட சூழலில் தான் அரசுப்பள்ளிகள் இயங்குகின்றன.

மொத்தத்தில் அரசுப் பள்ளிகள் மாணவர்களுக்கு “ வேரில்லாத மரத்திற்க்கு தண்ணீர் ஊற்ற கற்றுத்தருகின்றன ” என்றே கூறிடலாம்.

புகுத்த வேண்டிய புதுமைகள் :-

“தினம் தோன்றும் புதுமைகள் தான்
வாழ்க்கையை அலங்கரிக்கும்
விழிகளைக் கவர்ந்திழுக்கும்”

அரசுப் பள்ளிகளில் என்னதான் குறைகள் இருந்தாலும் சாதித்த மனிதர்களில் பலர் மலர்ந்தது இங்கு தான்...! இருப்பினும், பூக்கத் தவறிய மலர்களும் இங்குதான் அதிகம்...! ஆகவே, அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் திறமையை திறம்பட வளர்ப்பதற்க்குப் பல புதுமைகள் அவசியம்.

“ முல்லைக்குத் தேர் கொடுத்தார் பாரி ” என்பதோடு மட்டும் விட்டுவிடாமல் அந்த முல்லைக் கொடி நீண்டு வளர்வதற்க்கு உதவும் தொழில்நுட்பத்தையும் பாடமாக்க வேண்டும்.

மதிப்பெண்களை நோக்கி ஓடவிடும் கல்விமுறையை மதிப்புஅற்று போக வைக்க வேண்டும்.

பள்ளிகளில் திறமையைக் கண்டறியும் விதமாகவும், திறமையை நோக்கிப் பயணிக்கும் விதமாகவும் கல்விமுறையை மாற்ற வேண்டும்.

பள்ளி நேரத்தில் பாதியை அடிப்படைக் கல்வி கற்பதற்கும் மீதியைத் திறமையை வளர்பதற்குமாய் வகுக்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுது உருவாக்கப்பட்டது? எப்படி உருவாக்கப்பட்டது? என்பதை விட அதன் இன்றைய நிலைமை எவ்வாறு உள்ளது என மாணவர்களிடையே விவாதிக்க வைக்க வேண்டும்.

தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளை எழுத்து வடிவில் மட்டும் வைத்திடாமல் செயல்முறை பாடத்திட்ட வடிவிற்கு மாற்ற வேண்டும்.

இவைகளையெல்லாம் திறம்பட செயலாக்கம் செய்வதற்கு ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சியளிக்க வேண்டும்.

இவைகளையெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தால் நிச்சயம் அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் உயரும்.

சேர்க்கையை அதிகரிக்க :-

“ தேனிக்கள் தேடிவர
மணம்வீசும் மலர்களுக்கு விளம்பரம் தேவையில்லை ”

ஆம். அது போலத்தான், தரம் நிறைந்த கல்வியைக் கொடுத்தாலே, சேர்க்கை விகிதம் அதிகரித்திட பெரிய பாடொன்று தேவையில்லை. இருப்பினும் அரசின் சில துரித நடவடிக்கைகளும் தேவையே...

முதலில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்திய பிறகு “ அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கே அரசுக்கல்லூரிகளில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டாலே போதும். அரசுப் பள்ளி சேர்க்கைக்கு தவம்கிடக்க துவங்கிடுவர்.

மேலும், தமிழில் பயின்று வெளிவரும் அனைத்து மாணவர்களும் தமிழ்நாட்டிலேயே பணி செய்யும் விதமாக “தலைமுடியைக் கத்தரிக்கும் கத்தரியிலிருந்து விண்ணில் வட்டமடிக்கும் செயற்கை கோள்கள் வரை “ தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டிலேயே உருவாக்கிட வேண்டும். அவ்வாறு செய்தால் தான் தமிழைக் கற்க வேண்டுமென்ற அவசியமும் ஏற்படும். தமிழ்மொழிக்கும் மதிப்பு அதிகரிக்கும்.


முடிவுரை :-

அரசுப் பள்ளிகளை அரசியல் லாபத்திற்காக பந்தாடிடாமல் வருங்கால தமிழகத்தை அலங்கரிக்க போகும் பூந்தொடிகளாகப் பேணிக் காப்பதே சாலச் சிறந்தது.

எழுதியவர் : மு.ஜீவராஜ் (1-Jul-14, 1:31 am)
சேர்த்தது : மு.ஜீவராஜ்
பார்வை : 292

மேலே