அவள் அப்படித்தான்
அவள் அப்படித்தான்
(இந்த கதையும் கதாபாத்திரங்களும் கற்பனையே தவிர யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டது கிடையாது. )
(சுபாஷ், ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய நாவல்களில் பல புகழ் பெற்றவைகளாய் அமைந்திருந்தன.
சுபாஷ் ஒரு நாள் “அவள் அப்படித்தான்” என்றொரு நாவலை, கடற்கரை அருகே அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, தனக்கு பின்னால் நின்று யாரோ தன் தோளினைத் தட்டுவது போல் உணர்ந்ததும், திரும்பி பார்க்கையில், சுபாஷின் தோழியான “ஹாசினி” நின்று கொண்டிருந்தாள்.)
“ஹாசினி! நீ என்ன இங்க?”
“இல்லப்பா, வாரக் கடைசி, அதான் கடற்கரைப் பக்கமா கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு போலாம்னு வந்தேன். அதுசரி, நீ இங்க என்ன செஞ்சுக்கிட்டு இருக்க?”
“நான் ஒரு நாவல் எழுதிக்கிட்டு இருக்கிறேன்பா”
“நாவலா? என்ன நாவல்ன்னு கொஞ்சம் சொல்றியா!!?”
“ம்... இந்த நாவல் ஒரு உண்மைக் கதையைத் தழுவி எழுதப்படக்கூடியது. “கனகம்” என்றொரு பெண் எப்படியெல்லாம் தன் வாழ்க்கையைத் தன்னைச் சூழ்ந்துள்ள உறவுகளுக்காக அர்ப்பணித்து வாழ்ந்திருக்கிறாள், என்பது தான் இந்த நாவல்.”
“கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் போலயே? எனக்கு கொஞ்சம் அந்த கதையைச் சொல்லேன்!”
“அதெல்லாம்...முடியாது...! புத்தகம் வெளியிடும்பொழுது படிச்சுத் தெரிஞ்சுக்கோ!”
“ஏய் தயவுசெய்து சொல்லுப்பா! என்னால அதுவரைக்கெல்லாம் காத்துக்கிட்டு இருக்க முடியாது.”
“சரி!சரி!, அதுக்கு ஏன் தயவுசெய்துன்னு எல்லாம் சொல்லுற?”
(கதையைக் கேட்க ஆர்வமானால் ஹாசினி)
“மதுரையில் நீலகண்டன், ஜோதியம்மாள் தம்பதியர்க்கு மகளாய் பிறந்தவள் கனகம். சிவந்தமேனி, அம்சமானமுகம் எனப் பார்ப்பவரைப் பொறாமைக் கொள்ளும் விதமாக ஒரு அழகிய தேவதையாக வாழ்ந்து வந்தாள். கனகத்திற்கு உடன்பிறந்தவர்கள், மூன்று தமையன்களும் ஒரு தங்கையும். அவள் குடும்பத்தின் பிரதான தொழில் நெசவுத்தொழில். பள்ளியில் நன்றாகப் படித்து வந்த போதும், குடும்ப சூழலால் தன் கல்வியை ஐந்தாம் வகுப்புடன் நிறுத்திக் கொண்டாள் கனகம். பிறகு தந்தையின் விருப்பத்திற்கிணங்க நெசவுத்தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள் கனகம். இதுதான் அவள் தன் வாழ்வில் பிறருக்காக ஏற்றுக்கொண்ட முதல் மாற்றம்.
நெசவு நெய்தல், சமையல் செய்தல், வீட்டைப் பராமரித்தல் என அத்தனையிலும் ஜோதியம்மாளுக்கு உதவியாய் இருந்தாள் கனகம். இப்படியொரு வாழ்க்கையில் அவளுக்கிருந்த ஆறுதல், தோழிகளும் அவர்களுடன் இணைந்து பார்க்கும் திரைப்படங்களும் தான். அதற்கும் வந்தது ஒரு முடிவு! ஒரு நாள் திரைப்படத்திற்குச் செல்வதற்க்கு, தந்தையாரிடம் அனுமதி கேட்ட பொழுது “இன்னைக்கு நீ சினிமாவுக்குப் போகணும்னா, அடுத்த சினிமாவுக்கு நீ எப்போ போவன்னு சரியா சொல்லிட்டுப் போ!” என்று நீலகண்டன் கேட்க, அந்த ஆசைக்கும் முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டாள் கனகம்.
பிறகு இருபது வயதில் கனகம், முருகேஷை மணம் செய்து கொண்டாள். நடுத்தர வர்க்க மணவாழ்வில் என்ன நடக்கும்? வழக்கம்போல் மாமியார், நாத்தனார்களின் அர்த்தமற்ற குணம்தான், அவளையும் வதைக்க ஆரம்பித்தது !
திருமணமான ஒரு வருடத்தில் ரோஜாவின் நிறத்தில் தன் ஜாடையிலேயே அழகான பெண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்தாள் கனகம்! அதற்கு சீலா என்ற பெயரும் வைத்தாள். மாமியாரோ, “வரதட்சனையாகத் தராமலிருக்கும் தங்கச்சங்கிலியைப் பெற்றுக் கொண்டுதான் வர வேண்டும்” என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் !
ஆனால், கனகத்தின் பெற்றோர்களோ அதைச் செய்ய முடியாத சூழலில் இருந்தனர். இருப்பினும் சுய கெளரவத்தை விட்டுக்கொடுக்காத கனகம், தன் பிள்ளைக்குப் பால் வாங்க கூட பணமில்லாத நிலையிலும் துணிவுடன் போராடி, நெசவு நெய்து, பணத்தைச் சேர்த்து, அதில் தன் மாமியார் கேட்ட நகையை வாங்கிக் கொண்டு, கணவன் வீட்டிற்குத் தன் குழந்தையுடன் சென்றாள் !
இருப்பினும் அவள் கஷ்டம் தீரவில்லை. ஏனென்றால், பிள்ளைக்கு பால் வாங்குவதற்குக் கூட பிள்ளையார் சிலை ஒன்றைத்தான் நம்பியிருந்தாள் கனகம்! ஆம். கனகத்தின் கணவர், தான் வேலை செய்யும் பட்டரையிலிருக்கும் பிள்ளையாருக்கு ஒரு சிலர் பூஜை செய்து வைக்கும் முக்கால் ரூபாயை எடுத்துக் கொண்டு வருவார், பால் வாங்குவதற்கு! ஆனால், சம்பளம் கிடைக்கும்பொழுது மறக்காமல் கடனைத் திருப்பி செலுத்திடுவர் பிள்ளையாருக்கு!
பின்னர், கணவனுடன் இணைந்து போராடித் தன் குடும்பத்தை ஏற்றம் கொள்ள வைத்து, புகுந்த வீட்டில் தனக்கிருந்த பிரச்சனைகளையும் ஒரு வழியாக தீர்த்தாள் கனகம். ஆனால், அதன் பின், உடன்பிறப்புகள் வழியே பிரச்சனைகள் மூண்டது !
கனகத்தின் மூத்த தம்பியோ ஊதாரிக்கு இலக்கணமாய் சுற்றித் திரிந்தான். திடீரென்று ஒரு நாள் தான் வெளிநாடு செல்வதற்கு பணம் வேண்டுமென்று பெற்றோரிடம் நச்சரிக்க ஆரம்பித்தான். கனகமும் பெற்றோரின் நிலைமையை புரிந்துக் கொண்டு, வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து உதவினாள். ஆனால், அவனோ வெளிநாட்டிற்கும் செல்லவில்லை! பணத்தையும் பத்திரப்படுத்தவில்லை!
பின்னர், கனகத்தின் இரண்டாவது தம்பியோ, மதுவிற்கு அடிமையாகி உடல்நிலைக் கெட்டுத் திரிந்தான். அவனை மருத்துவமனையில் சேர்த்து, வேண்டிய செலவுகளைச் செய்து, உபசரணையையும் செய்தாள் கனகம். இந்நிலையில் கனகத்திற்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்த குழந்தைக்கு “சுபாஷ்” என்றும் பெயரிட்டாள்.
பின்னர், சிறுக சிறுக சேமித்த பணத்தில், அழகான மாடி வீடு ஒன்றைக் கட்டினாள் கனகம்! அந்த நேரத்தில் கனகத்தின் தம்பிகளும் பெற்றோரும் திருப்பூருக்கு தொழில் நிமித்தமாக இடம்பெயர்ந்தனர். அங்கு அவர்கள் தங்குவதற்கு ஒரு நல்ல வீடில்லாமல் இருந்ததால், கனகத்தின் தம்பிகள் “மதுரையில் குடியிருந்த தந்தையாரின் வீட்டை விற்றிடலாம்” என்று நினைத்தனர். அப்பொழுது கனகம் “பாரம்பரியமாய் வாழ்ந்து வந்த வீட்டை விற்க வேண்டாம்! அதை நான் கூட வாங்கிக்கொள்கிறேன்!” என்று கூறி பதிலுக்கு தான் ஆசையாய் கட்டிய புதிய வீட்டை விற்று, திருப்பூரில் நிலம் வாங்கி, வீடு கட்டிக் கொடுத்தாள் அந்த அப்பாவி மகள்! தம்பிகள் மீது வைத்த நம்பிக்கையில், தந்தை வீட்டிற்காக தன் பெயரில் பத்திரங்களும் எழுதி வாங்கிக் கொள்ளவில்லை கனகம்!
இந்நிலையில் கனகத்தின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான மருத்துவச்செலவுகள், உபசரிப்புகள் செய்து தன் பிள்ளைகளில் ஒருவராய் தன் தாயைப் பார்த்துக் கொண்டாள் கனகம்! இதற்கு கனகத்தின் கடைசி தம்பி மட்டுமே துணை நின்றார்! நோயின் வீரியம் அதிகரிக்க கனகத்தின் தாயார் காலமானார். பின்னர் தன் முதல் இரண்டு தம்பிகளுக்கும், தாயாகவும் பொறுப்புள்ள அக்காவாகவும் இருந்து, தகுந்த பொருட்செலவில் திருமணம் நடத்தி வைத்தாள், கனகம்!
பின்னர், நெசவுத் தொழில் நலிவுற்ற பிறகு, இட்லி தோசை மாவு விற்று, தன் மகளையும் மகனையும் கல்லூரிப் படிப்பு வரை அனுப்பிவைத்தாள் கனகம்! வாழ்வின் பெறும் பகுதியைத் தன் சுற்றத்திற்காகவே உழைத்து உழைத்து தேய்ந்தவள், திருப்பூருக்குச் சென்று தம்பிகள் வீட்டில் தங்கி வேலை பார்த்தால் சற்று நிம்மதி கிடைக்குமென்று சென்றாள். ஆனால், அவள் செய்த நன்மைகளைச் சிறிதும் எண்ணாமல், அவளைத் தண்டமாகவும் தொந்தரவாகவும் மட்டுமே பார்த்து அவள் மனதை நோகடித்து திருப்பி அனுப்பிவிட்டனர் அந்த பாசத் தம்பிகள்!
பின்னர், கனகத்தின் தந்தையாரும் காலமான பிறகு, தந்தையார் பெயரில் மதுரையிலிருக்கும் அந்த பாரம்பரிய வீட்டினைத் தன் பெயருக்கு மாற்றுவதற்கு கனகம் தம்பிகளை அனுகிய பொழுது மனிதத்துவம், சகோதரத்துவம் அற்ற அவர்கள் “அந்த வீட்டினை உனக்குத் தருவதற்கு நாங்கள் கையெழுத்திடமாட்டோம்!” என்று அவளை ஏமாற்றி, அவளின் நம்பிக்கையையும் புதைத்துவிட்டனர்! மேலும், கனகத்தின் கணவரையம் அவமானம் செய்து விட்டனர். அதிலும், மூன்றாவது தம்பி மட்டுமே கனகத்திற்குத் துணை நின்றான்.
மனம் உடைந்த கனகம், பின்னர்தன் குடும்பத்தையும், நோய்வாய்பட்ட தன் மாமியாரையும் பாதுகாப்பதிலேயே தன் வாழ்வை அர்ப்பணித்து கொண்டாள்! ”
“ஏய்...சுபாஷ், இடையில அந்த கனகத்தோட பையன் பேரு சுபாஷ்னு சொன்னியே...அது நீ தானா ?”
“ஆம். அந்த கனகம் தான் என் தாயார் !”
“ஓ... அப்போ, இப்ப உங்க அம்மா அந்த தம்பிகள விட்டு முற்றிலுமா ஒதுங்கிட்டாங்களா?”
“அவள் என்றும் தன் தொப்புள்கொடி உறவுகளைக் கிழித்தெரிந்திட மாட்டாள். சிலகாலத்திற்கு முன்பு தான் தன் மகளைத் தனது கடைசித் தம்பிக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கிறாள்!”
“அப்போ, எப்பவுமே உங்க அம்மா இப்படித்தானா?”
“எப்பவுமே “அவள் அப்படித்தான் ””.