மீண்டும் வானம்பாடி
![](https://eluthu.com/images/loading.gif)
எங்கோ ஒரு பறவை இசை
மீட்டுகிறது என் கற்பனை வரிகளுக்கு
நான் மட்டுமான இந்த உலகத்தில்
நாதம் எட்டிப் பார்த்ததாய் எண்ணம்
பாட்டுப் பாடும் மனம் பறக்கத்
துடிக்கிறது ,பழமைகளைக் கழித்து விட்டு
புத்தம் புதிய காற்றில் ஏறி
உலகை பவனி வர ஆசைதான்
மரபு வேலிக்குள் மட்கிப் போன
கனாக்கள் மறு பிறவி கண்டன
உதிர்ந்த பாக்கள் உதித்தன புதியதாய்
தயக்கப் புயல் கரை கடந்தபோது
சாளரத்தில் முகம் காட்டுகிறது வெளிச்சம்
கைக்கெட்டும் தொலைவில் வாழ்க்கை வானம்
எட்டித்தொட மனமின்றி வளைத்துப் பார்க்கச்
சிறகடிக்கிறது மனம் மீண்டும் வானம்பாடியாய் !!