- வந்தவாசி, கடித இலக்கிய நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -

மனித மனதை விசாலப்படுத்தும் உன்னத இலக்கியங்களே கடிதங்கள்.

வந்தவாசி.ஜூலை.27.அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா தொகுத்த கடித இலக்கிய நூல் வெளியீட்டு விழாவில், அறிவியல் தொழில் நுட்பம் எவ்வளவு வசதிகளைத் தந்தாலும், கடிதம் எழுதுகிற ஒரு மன நிறைவை வேறெந்த செயலும் தந்துவிடாது என்று அகநி வெளியீட்டின் இயக்குநரும் கவிஞருமான மு.முருகேஷ் பேசினார்.
இவ்விழாவிற்கு பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெ.சுப்பிரமணியன் தலைமையேற்றார். மருதாடு இ.லட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
புதுவை பாரதிவாணர் சிவா தொகுத்த கடித இலக்கிய நூலான ‘பதிவுகள்’ நூலை அகநி வெளியீட்டகத்தின் இயக்குநர் கவிஞர் மு.முருகேஷ் வெளியிட, தொழிலதிபர் இரா.சிவக்குமார் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் படிகளை செய்யாறு அரிமா சங்கத் தலைவர் மு.சண்முகம், மாநிலக் கருத்தாளர் வெம்பாக்கம் ரத்தினக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கடித நூலை வெளியிட்ட கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, மனித மனங்களை இணைக்கிற தகவல் தொடர்பு சாதனமாக கடிதங்கள் விளங்கின. அன்பையும் நட்பையும் காதலையும் பரிமாறிக் கொள்வதில் கடிதங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. தூரங்களைச் சுருக்கி, மனித மனங்களை விசாலப்படுத்தியவை கடிதங்களே. இன்றைக்கு அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் செல்பேசி குறுஞ்செய்திகள், கணினி மூலமாக மின்னஞ்சல் என தகவல் தொடர்பு வசதிகள் பெருகிவிட்டன.கடிதம் எழுதுகிற கலையே இப்போது குறைந்து விட்டது.
இலக்கிய வடிவங்களில் கடித இலக்கியத்திற்கும் மிக முக்கிய பங்குண்டு. ஜவஹர்லால் நேரு தன் இந்திராவிற்கு எழுதிய கடிதங்கள், பேரறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களும் சமூகத்தின் அழியா சாட்சிகளாய் இன்றைக்கும் வாசிக்க கிடைக்கின்றன. ரசிகமணி டி.கே.சி., எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி,கி.ராஜநாராயணன் ஆகியோர் கடிதங்கள் வழியே இலக்கியத்தை வளர்த்தெடுத்தனர். தன் கடைசி காலம்வரை எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணனும், தி.க.சிவசங்கரனும் தமிழகம் முழுவதுமுள்ள இளைய படைப்பாளர்கள், சிற்றிதழ் ஆசிரியர்களுக்கு அஞ்சலட்டை வழியே வாழ்த்துகளையும், விமர்சனங்களையும் எழுதி ஊக்குவித்தனர். கடிதங்கள், நாட்குறிப்புகளின் வழியேதான் நமது சில வரலாற்றுச் செய்திகளை நாம் அழிந்துவிடாமல் கிடைக்கப் பெற்றோம்.
இன்றைக்கு வருகிற கடிதங்களை படித்தவுடன் கிழித்துவிடும் காலச்சூழலில், கால்நூற்றாண்டு காலக் கடிதங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கும் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவாவின் இப்பணியை தமிழிலக்கிய உலகம் பாராட்டி வரவேற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கவிஞர் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா ஏற்புரையில், நான் சிறுபத்திரிகை ஆசிரியனாக இருக்கையிலேயே எனக்கு கடிதங்கள் எழுதி ஊக்கப்படுத்தியவர்கள் எழுத்தாளர்கள் பூவண்ணன், வல்லிக்கண்ணன் இருவரும்தான். இப்படியான பெருமக்களின் பாராட்டினால் எனது இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்த நான், எனக்கு வரும் எந்த ஒரு கடிதத்தையும் படித்த பின் தூக்கிப் போட்டுவிடாமல்,சேகரித்து வைத்தேன். மறைந்த பின்னும் தன் எழுத்துக்கள் வழியே படைப்பாளர்கள் வாழ்வதைப் போலவே, இதிலுள்ள கடிதங்கள் மூலமாக பலப்பல சமூக நிகழ்வுகள் என் மனதில் நீங்காமல் இடம்பிடித்ததுள்ளன என்றார்.
நிறைவாக, செம்பூர் வி.கல்பனா நன்றி கூறினார்.
படக் குறிப்பு ;
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா தொகுத்த கடித இலக்கிய நூலை கவிஞர் மு.முருகேஷ் வெளியிட, தொழிலதிபர் இரா.சிவக்குமார் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம். அருகில், நூலாசிரியர் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா, தலைமையாசிரியர் பெ.சுப்பிரமணியன், அரிமா சங்கத் தலைவர் மு.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.
தகவல் :
Murugesh Mu

எழுதியவர் : முருகேஷ் மு (28-Jul-14, 9:14 am)
பார்வை : 59

மேலே