இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்
(படித்ததில் பிடித்தது)
எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது.
இவ்வாறு முதல் மாணவராகவே படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டே அந்த மாணவர் வந்ததில் ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலம் வங்காள மாநிலத்தில் சேர்ந்திருந்தது. பீகார் மாநில மாணவர்கள் எல்லோரும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்.
வங்க மொழி பேசுவோர் பீகாரிகளைப் படிப்பறிவு இல்லாதவர்கள், மதிநுட்பம் இல்லாதவர்கள் எனப் பேசுவார்கள். இப்படி கேவலமாய்ப் பார்ப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வெறியோடுதான் அந்த மாணவர் படித்து முதல் மாணவராக வந்திருக்கிறார்.
அந்த மாணவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்.