உன் தேகத்தின் வாசனை

உன்
துப்பட்டாவுக்கு
நீ
தண்டனை
தருவதாகவே
தோன்றுகிறது !
அது உன்
கழுத்தைச் சுற்றிக்
கிடப்பதைப்
பார்க்கும்போதெல்லாம் !

================================

" இந்த டைரியில்
கவிதைகள்
எழுதுகிறேன் "
என்கிறாய்
நீ !
" இந்த டைரி
கவிதையால்
எழுதப்படுகிறது "
என்கிறது
டைரி !

============================

உண்பது
நீயாக இருந்தால்
ஐஸ்க்ரீமுக்கும்
சளி பிடிக்கும் !

நனைவது
நீயாக இருந்தால்
மழைக்கும்
காய்ச்சல்வரும் !

============================

சும்மாயிருந்த எனக்கு
கவிஞன் எனும்
வேலை கொடுத்தவளே !
கூடியவிரைவில்
காதலன் எனும்
பதவி உயர்வை
எதிர்பார்க்கலாமா ?

============================

நான்
உனக்கெழுதும்
கடிதங்களில்
" மானே
தேனே
பொன்மானே " க்களெல்லாம்
எதற்கு ?
பேசாமல்
உன் பெயரையே
நடுநடுவே
போட்டுக்கொள்கிறேனே !

நன்றி : குணா திரைப்படம்

============================

நீ
அருகிலிருந்தால்
தமது வேலைப்பளு
அதிகமாகிவிடுவதாக
என்னிடம் வந்து
புலம்பித் தீர்க்கின்றன
எனது ரசனைகள் !

============================

எதற்கோ நீ
உதடு கடிக்கும்
போதெல்லாம்
உன்
உதட்டுக்கும்
பல்லுக்கும் நடுவே
சிக்கிக்கொள்கிறது
என்னுடைய உயிர் !

============================

கனத்துக்கொண்டே
போன
என் இதயம்
கடைசியில்
பெற்றே எடுத்துவிட்டது
ஒரு குழந்தையை !

அடி கள்ளி .......
என் இதயத்தை
எப்போது
கர்ப்பமாக்கித் தொலைத்தாய் ?

சரி சரி ........
பிறந்த குழந்தைக்கு
காதல் என்று
பெயரிடவா ?

============================

கன்னம் சிவந்து
நீ
வெட்கப்படுகிறாய்
சரி ........
எது சிவந்து
உனதந்த
வெட்கம்
வெட்கப்படும் ?

============================

சிறு பிள்ளைகள்
மகிழ்ச்சியில்
துள்ளிக்குதித்து
ராட்டினத்தில்
ஏறிக்கொள்வது போல
உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
மகிழ்ச்சியில்
துள்ளிக்குதித்து
உன் மீது
ஏறிக்கொள்கின்றன
என் கண்கள் !

============================

உன் துப்பட்டா
கலைத்து வந்த
குற்றத்திற்காய்
கொஞ்ச நேரம்
சிறைபிடித்து வைக்கிறேன்
அந்தக்காற்றை
என் நுரையீரலில் !

============================

நீ
விட்டுப்போன
செருப்பும்
என் கண்கள் அமரும்
சிம்மாசனமே !

============================

மெனக்கெட்டுச்
செய்கிறேன்
உனக்குப்
பிடித்ததெல்லாம் !
மெனக்கெடாமலே
பிடித்துவிடுகிறது
நீ
செய்வதெல்லாம் !

============================

என்
முத்த விண்ணப்பத்திற்கு
நீ
அனுமதி மறுக்கும்
நாட்களிலெல்லாம்
நீயாகிவிடுகிறது
என் தலையணை !

============================

இமை ஆடைவிலக்கி
விழி நிர்வாணம் தரிசித்து
நம் கண்கள் செய்த
கலவியின் விளைவாய்
நமக்கு
புன்னகை என்ற
குழந்தைகள் பிறக்கின்றன !

============================

ஏதோ ஒரு
புள்ளியில் தான்
என்னை உனக்கு
பிடித்துப் போனது !
ஒவ்வொரு
புள்ளியிலுமே
உன்னை எனக்கு
பிடித்து போனது !

============================

உன்
தேகத்தின் வாசனையை
ஒரு புட்டியில் அடைத்து
நீ தருவதாக இருந்தால்
சிகெரெட் என்ன
கஞ்சாவானால் கூட
நான் மீண்டுவிடுவேன் !

============================

ஆடை மூடாத
உன் பாகங்களில்
பட்டுத்தான்
ஒரு காற்று
தென்றலாக மாறுகிறதோ ?

============================

ஜோசியர் சொன்னபடியே
காரியசித்தி வேண்டி
என் நோட்டுப்புத்தகத்தில்
நானெழுதுவது
ஸ்ரீ ராமஜெயம் அல்ல..........
உன் நாமஜெயமே !

============================

உன் மடியில்
தலை சாய்த்தபடியே
உன் தலைகோதலில்
கண் கிறங்கியபடியே
செத்துப் போகவும்
எனக்கு சம்மதமே !

============================

- கிருஷ்ண தேவன்

எழுதியவர் : கிருஷ்ண தேவன் (15-Aug-14, 6:54 pm)
பார்வை : 668

மேலே