இன்னும் உறங்கிக் கிடக்கணுமா

இங்கே சுதந்திரம் எதற்காக?
இருட்டில் வந்த சுதந்திரமா?
இனிதான் விழிகள் திறக்கணுமா?

இரண்டாய் பிரிந்து வந்ததனால்
இன்னும் பிரித்தே பார்க்கணுமா?
இருட்டே சுகமென வாழணுமா?
எழுந்திடப் பயந்து சாகணுமா?

பட்டேல் கூட்டி இணைத்ததையேப்
பன்மொழி மா,நிலம் ஆக்கணுமா?
கொட்டிலில் கிடக்கும் பசுவினமா?
கொறித்துக் கழித்து மரிக்கணுமா ?
கூட்டு நதி நீர்த் திட்டத்தைப்
பூட்டி வைத்து முடக்கணுமா?
மேட்டு நதிகள் கொதிப்படைந்து
மா,நிலக் கரைகளை உடைக்கணுமா?
காட்டி நின்ற கேதார்நாத்
கன்னியா குமரி பார்க்கணுமா?

மரபணு விதைகளில் நிற்கணுமா?
மக்களை மாற்றிப் பார்க்கணுமா?
உறவுகள் திரிந்தே போகணுமா?
உயிருடன் பிணமாய் வாழணுமா?

லட்சிய மெல்லாம் மாறணுமா?
லஞ்ச உறைகளில் மறையணுமா?
எல்லையுள் பிரிவினை பேசணுமா?
இருப்பதைப் பகிர மறுக்கணுமா?
தொல்லையுள் கிடந்து தவிக்கணுமா?
தூரத்து எதிரிகள் சிரிக்கணுமா?

இருப்பவர் கூடி வாழாமல்
எதிரிகள் நட்புக்கு உழைக்கணுமா?
திருப்பம் பொருளை வெல்லவோ?
தேடிய பண்பினைக் கொல்லவோ?
பேரிடர் இயற்கை அழிவினிலா?
பேதப் படும்,நம் இழிவினிலா?

[பேரிடர் இயற்கை எழுச்சியிலா?
பேதப் படும்,நம் வீழ்ச்சியிலா?]

இருட்டில் சுதந்திரம் கிடைத்ததனால்
இன்னும் உறங்கிக் கிடக்கணுமா?

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (15-Aug-14, 8:54 pm)
பார்வை : 153

மேலே