ஓ பாகம் இரண்டு

ரம்யாவிடம் பேசிக் கொண்டே இருந்த தீபா ஆற்றாமையால் அழத்தொடங்கியிருந்தாள்.....! மறுமுனையில் எல்லாம் கேட்டுக் கொண்ட ரம்யா....தீபாவைத் திடப்படுத்தினாள். ' லுக்....தீபா வாழ்க்கைனா என்ன விளையாட்டுன்னு நினைச்சீயா...சின்ன சின்ன சண்டைகள் கணவன் மனைவிக்குள்ள வர்றது சகஜம்தான். கணவன் மனைவின்னு இல்ல தீபா எல்லா உறவுகளுக்குள்ளும் பிரச்சினைகள் வரும். பிரச்சினைகளை விளங்கி விட்டுக் கொடுத்து வாழ்றதுதான் வாழ்க்கை ' சொல்லி முடிக்கும் முன்னரே வெடிக்கத்தொடங்கியிருந்தாள் தீபா....

ரம்யா இது முதல் தடவைன்னா பரவாயில்லை...குழந்தை பிறந்து 8 வருசத்துல எவ்வளவு அட்ஜஸ்ட் பண்ணி போயிருப்பேன் தெரியுமா? கொஞ்சம் கூட என்னை புரிஞ்சுக்காம இருக்க ஒரு மனுசன் கிட்ட எப்டி வாழ்றது...? என்னுடைய சந்தோசங்கள்னு எல்லாத்தையும் தொலைச்சு புதைச்சுகிட்டு ஒரு கல் மாதிரி வாழ்றது வேஸ்ட்... ரம்யா......!

மெல்ல விலகிட்டோம்னா ஆளாளுக்கு ஒரு வழிய பாத்துட்டு போகலாம்லயா.... எதுக்கு இப்டி ஒரு வாழ்க்கை....கல்யாணம் தாலி...நமக்கு பிடிச்ச மாதிரி யாரு கூடவேணா சேர்ந்து வாழணும்... இப்டி ஒரு வேலி போட்டுகிட்டு சமுதாயம்...சம்பிரதாயம்னு...சுமை சுமை எல்லாமே சுமை ரம்யா! ஒரு கமிட்மெண்டும் இல்லாம இருந்தா இப்படி பிரச்சினைகள் வரும்போது...

இந்தாப்பா..இது சரி வராது..உனக்கு நானோ எனக்கு நீயோ அடிமையில்லை...சரி வராது... நீங்க உங்க வழிய பாத்துட்டு கிளம்புங்க....நான் என் வழிய பாத்துட்டு கிளம்பிட்டே இருக்கேன்னு போய்கிட்டே இருக்கலாம்ல...இப்போ கல்யாணம் தாலி... சேத்துவச்ச ஒரு கூட்டம்..அம்மா அப்பா, மாமா மச்சான்னு ஊரே கிளம்பி வந்து நியாயம் சொல்வாங்க ...என்ன சொசைட்டிப்பா இது...? என் பிரச்சினை எத்தனை பேருக்குத்தெரியும்..ஊரே வந்து ஏன் மூக்கை நுழைக்கணும்....இது மை லைஃப் மை வே...இல்லையா ரம்யா? ' அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்த ரம்யா.. கேட்டாள் ' முடிச்சிட்டியா தீபா? ஷல் ஐ டாக்?.......

உன் லைஃப் உன் வே தானே... சரி ஓ.கே.. ! நீங்க பிரிஞ்சுடுங்க... ஏற்பாடு பண்ணலாம். சொசைட்டி சொசைட்டினு சொல்றியே..சொசைட்டி வந்து உன் கைய பிடிச்சா தடுக்குது.....வேணாம்னு. இப்போ போட்டீங்களே சண்டை அதுக்கும் சொசைட்டிக்கும் என்னடி சம்பந்தம்? உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சு சந்தோசமா இருங்கன்னுதான் சொசைட்டி சொல்லுது...

சண்டை போட்டது நீங்கதான்?இப்போ என்னடா சேர்ந்து இருந்த ரெண்டு பேரு பிரியக்கூடாதேன்னு ...மறுபடியும் வந்து உங்கள சேத்து வைக்கதானே சொசைட்டி ட்ரை பண்ணும்.....ம்ம்ம்ம் முடிஞ்ச வரைக்கும் பார்க்கும் இந்த சொசைட்டி அதுக்கு மேலயும் உன்னை வற்புறுத்த போறது.... இல்ல யாரும். ஊர் உலகத்துல அவன் அவனுக்கு ஆயிரம் வேலை இருக்கு....சரியா? பெண்ணடிமையும் அத்துமீறலும் ஒரு காலத்துல நடந்துச்சு இன்னும் அதே எண்ணத்தோட யாரும் இல்லை. எல்லாம் நீங்க சேர்ந்து வாழ முடியாம அந்த இயலாமையில ஊரையே குத்தம் சொல்றீங்க....

உன் பிரச்சினையின் மூலம் என்ன? அதைப்பாரு..அதைத் தீர்க்க பிரிதல்தான் உத்தமம்னு நீ முடிவு பண்ணினா பிரிஞ்சுடு....அவரும் பிரியட்டும்...பிள்ளை? அது பத்தி உங்களுக்கு என்ன கவலை...? நான் வாழணும் மை லைஃப் மை வே.. பிள்ளைக எக்கேடோ கெட்டுப் போகட்டும்? உனக்கு முழு உரிமை இருக்கு உன் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்க...யோசிச்சு பாரு..அப்புறம் சொல்லு...உன் முடிவ? ஏண்டி இவளே..இது பத்தி விவாதிக்கவே உனக்கு ஒரு ஆளு ஃப்ரண்டுனு வேணும்...அப்புறம் என்ன மை லைஃப் மை வே.....? யோசிச்சு நல்ல முடிவா நீ எடு.. நான் வக்கீலுக்கு ஏற்பாடு பண்றேன்...சரியா...

டீ தீபா நான் ஒண்ணு கேக்குறேன்..உன் புருசன் உனக்கு ஒண்ணுமே நல்லது செஞ்சது இல்லையா? நினைச்சுப் பாரு ஏதாச்சும் ஒண்ணு ரெண்டாவது இருக்கும் ...அதை அவரு ஏன் செஞ்சாருன்னும் திங்க் பண்ணிப்பாரு? நினைச்ச நினைச்ச மாதிரி எல்லாம் வாழ ஆரம்பிச்சா பைத்தியம் பிடிச்சுடும்டி... கொஞ்சமாச்சும் ஒரு கட்டுக்குள்ள வாழ்ந்தாத்தான்.. வாழ்க்கைய ரசிக்க முடியும்.... நீ ஒரு வார்த்தை கூட பேச வேணாம்.....போய் யோசி...நான் ஈவ்னிங் கால் பண்றேன்..' மறுமுனையில் ரம்யா தொலைபேசியை துண்டித்தாள்....

தீபா சிலையாக நின்றிருந்தாள்.ம்ம்ம்ம்ம்ம் பிரிஞ்சா குழந்தை என்ன ஆவான்....? நாம எப்டி வாழ்வோம்? வேறு ஒருத்தன் கூட நான் சேர்ந்து வாழலாம்...அவனிடம் பிரச்சினைகள் இல்லாமல் இருக்குமா? இல்லை பிரச்சினைகள் இல்லாமல் சுமுகமாய் ஒரு வாழ்க்கைதான் இருக்குமா? அருண் என்னாவான்? என்னிடம் இருப்பானா? என்னிடம் இருந்தால் தீபக் பார்க்க வேணும்னா...என்ன செய்றது?

சரி குழந்தை என்ன நினைப்பான்? எங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை....விவரம் தெரிஞ்ச எங்களால் ஒத்துப் போக முடியாமல் இருப்பதற்கு குட்டிப்பையன் என்ன செய்வான்? வாழவே முடியாத அளவு பிரச்சினை என்றால் பிரியலாம். நெருப்பெரியும் வீட்டில் இருந்து தப்பிக்கும் போது உடைகள் பற்றிய கவலை இல்லை...ஆனால் அட்ஜட் பண்ண முடியாததா வாழ்க்கை.? இவ்வளவு உறவுகளும் பந்தங்களும் திருமணம் என்ற ஒரு நிகழ்ச்சியும் இப்போது கூட ஒன்றும் இல்லைதான்...அறுத்தெறிந்து விட என்னால் முடியும்....ஆனால்...ஒரு கணம் யோசிக்க வைக்கிறதே இந்த கூட்டமும் ....கூட்டம் ஏற்படுத்திய முறையும்....இது ஆரோக்கிய நிகழ்வுதானோ?

பிரியலாம்...? யார் தடை இப்போது? பிரிந்துதான் ஆக வேண்டும் என்றால் யாரும் மல்லுக்கட்டப்போவதில்லை...ஆனால்....எது தடுக்கிறது? எதுவோ யோசி யோசின்னு சொல்லுதே அது என்ன? ஒரு வேளை இந்தக் கல்யாணம் பந்தம் சொந்தம் ஊரு ஒட்டு உறவு இல்லேனா.. இந்தாப்பா உன் தாலின்னு சொல்லிட்டு... இந்த நேரம் போய்கிட்டே இருந்திருப்பேன்...

இப்போ மில்லியன் டாலர் கேள்வி வேறு ஒருத்தன் கூட வாழும் போது பிரச்சினையே வராதா? என்னை முன்னிலைப்படுத்தி வாழும் போது முதல் பலிகடா பிள்ளை..அவனின் சந்தோசம் என்ன என்று கேட்க ஏன் தோணவில்லை?

சேரும் மனிதர்கள் பிள்ளைகளை கேட்டு அவர்களை பெறுவதில்லை.... ஆனால் மேற்கொண்டு நகரும் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் அவர்களை பாதிக்கும் என்ற நிலையில் ஏன் அவர்களிடம் அபிப்ராயம் கேட்பதில்லை? தான் தோன்றித்தனமான ஒரு வாழ்க்கையில் முதலில் அடிபட்டுப் போவது பிள்ளைகள் தானே? இவர்கள் சேர்வார்களாம்.... பார்ப்பாகளாம்.... பிடிக்கலேன்னா இவுங்க பாட்டுக்கு பிரிவாகளாம்...எல்லாம் சரிதான்..பெத்து எடுத்து இருக்கும் பிள்ளைகள் கிட்ட எதுவும் கேக்குறது உண்டா இது பத்தி ? நெவர்......

பிரியவேண்டும் என்று எண்ணும் தம்பதிகள் பிள்ளைகளை கேட்பதில்லை....ஏனென்றால் பிள்ளைகள் எல்லாம் ரப்பரிலும், இரும்பிலும் செய்யப்பட்டு இருக்கும் பொம்மைகள்....? திடுக்கிட்டு தன்னை சுதாரித்துக் கொண்ட தீபாவிற்கு....மெலிதாய் ஏதோ பிடிபட..... தீபக்கோடு வாழ்ந்த அற்புத கணங்கள் அவள் கேட்காமலேயே அவளின் நினைவுக்குள் வந்தது....

ஆசைகள், பாசங்கள், வேசங்கள் எல்லாம் கூடிய வாழ்வின் ஒரு உன்னதம் காமம்.....! வாழ்வின் பெரும் சூட்சுமமும் காமமே....! பெரும்பாலும் காமம் பற்றிய புரிதல் மனிதர்களிடம் குறைவு...! வாழ்வின் மிகப்பெரிய சூட்சுமங்கள் இரண்டு ...ஒன்று பிறப்பு மற்றொன்று இறப்பு. இறப்பின் விரிவாக்கம் அறியப்படுவது மிகக் கடினம்.... அதற்கு மனமற்றுப் போய்...ஆன்மீக உச்சத்தில் தான் இறப்பின் அர்த்தங்களும் அதன் பிறகு என்ன என்பதின் விடைகளும் கிடைக்கும்...ஆனால்........

பிறப்பு...

காமம், தூக்கம், பசி, கோபம் நான்கும் ஒன்றுதான் மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும். மனிதனின் காமம் மற்றவை போலன்று அங்கே உடல்கள் மற்றும் ஒன்றுவதில்லை....அங்கே சூட்சுமமாய் வேறு ஒன்று கலக்கிறது....பிறப்பு என்ற ஜனனத்தின் சூட்சுமத்தினை மனிதனும் அரங்கேற்றுமொரு இடம்தான் காமம்....

இதில் எப்படி புனிதமும் ஆழமும் இல்லாமல் இருக்கும். காமத்தை மனிதன் கவனிக்க வேண்டும் அது வெறுமனே உடல் இச்சை அல்ல... அது பிரபஞ்ச நுட்பம். ஆண் பெண் உச்சத்தின் நுனியில் வீற்றிருப்பது.....உடல் அல்ல.. அது உயிரும் அல்ல.... அங்கே உருவமற்ற கனமான ஆக்ரோசமான ஒரு சீற்றத்தின் உச்சம் அமைதி என்ற பெயர் தாங்கியிருக்கிறது. ஆணும் பெண்ணும் கலக்கும் நேரத்தில் அங்கே பரிமாறப்படுவது..... நுண்ணிய உணர்வுகளும் அதிர்வுகளும்தான்...!

படைப்பில் பங்கெடுக்கும் செயல் காமம். அந்த செயலில் பலனே உடல் பெறும் இன்பம்....காமம் மாற்றப்படுவதற்கு மனது முடிவெடுத்தல் அதில் எதிர்மறையான நிகழ்வுகள் நிச்சயம் நிகழ்ந்தேறும். தேவையின் பொருட்டு ஆன்மா எடுக்கும் தீர்மான முடிவுக்குப் பின் அது மாற்றப்பட்டால் அங்கே சீரான அலையியக்கம் எல்லாவற்றையும் சீராக்கும்.

இந்த சூட்சுமம் விளங்க முடியாதது...ஆனால் துணையை மாற்றும் முன்னால் தீர்மான முடிவுகளாக அது இருக்கவேண்டும்...தீர்மான முடிவுகளா? அல்லது மேல் மனதின் முடிவுகளா? .....என்று அறிய....முடியாத மனிதர்கள் மிகுந்திருக்கும் சமுதாயத்தில் ஒரு முடிவு எடுக்க பல பேர் தேவைப்படுகிறார்கள். ஆலோசனைகள் கேட்டு கேட்டு.. சரி தவறு என்பதை உள்வாங்கி....யோசனைகள் செய்து முடிவுகள் எடுக்கப்படவேண்டும்...இதுக்குத்தான் கல்யாணம்.. தாலி...ஊர் உலகம் மக்கள்.......

எங்கே எங்கேயோ படித்தது தீபாவின் நினைவுகளில் ஓட... டக்கென்று கழுத்தில் கை வைத்து பார்த்ததில்... தாலி இல்லை என்பதை உணர்ந்து வேகமாய் போய்.. டைனிங் டேபிளின் கீழே பார்த்தாள்.. தாலி என்ற வஸ்து சுருண்டு ஒரு விலை இல்லாமல் கிடந்தது.. சடக்கென்று எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டாள் தீபா...!

தாலி..........இவள் ஒருவனுடன் வாழ்கிறாள்.... இவள் தவிர்த்து வேறு பெண் கூடத்தான் நான் வாழ வேண்டும்....தாம்பத்யம் கொள்ள முடியும் என்று ஒரு ஆண் தீர்மானிக்க சமுதாயம் வைத்திருக்கும் ஒரு அடையாளம்....

ஆண்களுக்கும் காலில் மெட்டி அணியும் ஒரு பண்பாடு இருந்தது...இவன் யாருடனோ வாழ்கிறான்...என்று உணர்ந்து ஒதுங்கி பெண்கள் நடக்க சமுதாயம் ஏற்படுத்தியிருந்த ஒரு ஏற்பாடு...! காலபோக்கில் இந்த வழக்கினை ஆண் தன் அதிகாரம் என்னும் குள்ள நரித்தனத்தால் இப்போது மாற்றிவிட்டான்.

இது ஏன்....? ஒருத்தரை ஒருத்தர் பார்த்தால் பிடிப்பது மனித இயல்பு...இப்போது எனக்கு கோடி பேரை பிடிக்கும்... கோடி பேருக்கு என்னையும் பிடிக்கும் சரி... எல்லோருடனும் குடும்பம் நடத்தலாமா? எனக்குத்தான் அவர்களையும் அவர்களுக்குத்தன் என்னையும் பிடிக்கிறதே என்று வாதம் செய்ய முடியுமா? அபத்தம் பிடிபடுகிறதா.... ? இங்கே தான் நெறிமுறைகள் பிறந்தன....! மீண்டும் எங்கேயோ படித்த விசயங்கள் நினைவில் வர......அதை விட்டு வெளியே வந்த தீபா தெளிந்திருந்தாள்.....

அங்கே அலுவலத்தில் தீபக் தடுமாறிக் கொண்டிருந்தான்...ச்சே.. தப்பு பண்ணிட்டேனே...அவள அடிச்சிருக்க கூடாதோ..? இந்த பாழாய்ப் போன கோபம்... தொலச்சு தலைமுழுகணும்...சரி சரி இன்று வீட்டுக்கு சீக்கிரமே போகணும் என்று மனதுக்குள் தீர்மானித்தவனாய்...தொலைபேசியை சுழற்றியவனுக்கு....மறுமுனையில் தீபா வந்தாள்...' சாப்டியா? ' கோபம் குறையாதது போல கேட்டான்....' ம் ' மறுமுனையில் அவனின் உணர்வை உணர்ந்தவளாய்.... பதில் வந்தது. ' சரி சரி நான் சாயங்காலம் சீக்கிரம் வர்றேன் வெளில போகலாம் ' என்றான் ' வாங்க பாக்கலாம்...' என்றாள் அவள்... !

ச்சே....பொம்பளைகள் எல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்க் நமக்குத்தான் காலைல இருந்து ஒரு வேலையும் ஓடல....! என்னதான் இருந்தாலும் பொண்டாட்டிதானே விட்டுக் கொடுத்துபோனாத்தான் என்ன? அவ வீட்லயும் வேலை பார்த்து ஆபிசிலும் வேலை பார்த்து...ச்சே இதுல டைவர்ஸ் வேற... வாங்கணும்னு கேவலமா யோசனை வேற பண்ணிட்டேன்...!

ஆம்பளைன்னு ஒரு கர்வத்த பொருள் தேடுறதுலயும் வாழ்க்கைய செம்மைப் படுத்துறதுலையும் அரவணைக்கிறதுலயும் அன்பா நடந்துகிறதுலயும் காட்டுறது இல்ல யாரும்...ஆண்மைனா என்னமோ கத்திய எடுத்துக்கிட்டுப் போய் ஊரயே அடிச்சு போட்டுட்டு வர்றதுதான்னும்...காச்சு மூச்சுன்னு கத்துறதும்னுதான்னு தப்பு தப்பா கற்பிதங்கள்....

அது வீரம்... அந்த வீரம் பெண்ணுக்குள்ளேயும் இருக்கு...! மீசை வச்ச ஆம்பிளைன்னு ஒரு பதம் வேறு வழக்குல... அது என்ன மீசை வக்கிறது பெரிய விசயமா...கழுத விட்டா தானா வளருது...! தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டிருந்த தீபக் வேலையை வேக வேகமாக முடித்துக் கொண்டிருந்தான்.. ! போற வழில குட்டிச்செல்லத்த பிக்கப் பண்ணனும்....3 மணிக்கு எல்லாம் கிளம்பிடணும் மனம் யோசனைகள் செய்து கொண்டிருந்தது......

தீபக் வேலைகள் முடித்துக் கொண்டிருந்தான் வேகமாய்...!!!! வீட்டில் தீபா காத்திருந்தாள்..காதலோடு....

அருண் ஸ்கூலில் திட்டுக்கள் வாங்கியபடி கவலையில் இருந்தான் இன்னிக்கு மாலையும் சண்டை வருமா? குட்டி மனம் கவலையில் இருந்தது...வரப்போகும் சந்தோச தருணங்கள் அறியாமல்....

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது....மூன்று இதயங்களின் சந்தோச கணங்களை நோக்கி...!


தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா... (16-Aug-14, 4:43 pm)
Tanglish : o bagam irandu
பார்வை : 250

மேலே