விட்டு விடுதலையாக

எல்லோர் வாழ்விலும்
இருக்குது தளைகள்.

பெற்றோர் வழியே
பெற்றது கொஞ்சம்.
சுற்றம் சூழ்நிலை
சூட்டுது கொஞ்சம்.

சேரும் சமூகம்
போட்டது போக
நாமே பூண்வது
பலப்பல தாமே.

விருப்பு ஒரு தளை.
வெறுப்போர் கொடுந்தளை.
ஆசை பெருந்தளை.
அநுபவம் மறுதளை.

பழக்கம் ஒரு தளை.
பயமோர் வந்தளை.
வன்மை மிகுந்தளை
வறுமை தானே.

கர்வம் ஒரு தளை
கவலை கடுந்தளை
பொறுப்பு பெருமை
துக்கம் துயரென

ஆயிரந்தளைகளில்
ஆழச் சிக்கினோம்
தளைகளின் பிடியில்
தவிக்குது வாழ்வும்.

ஒவ்வொரு தளையாய்
உடைத்திட உடைத்திட
மறுபடிக் கூடும்
மாட்டுவோம் நாமே.

அத்தனைத் தளைக்கும்
அம்மையப்பனே
“எனக்கு ” மற்றும்
“எனது” எனும் உணர்வே.

இவ்விருவுணர்வும்
இருக்கும் வரைக்கும்
தளைகளைத் தறிப்பது
சாத்தியமிலையே!

தளைகளையறுத்து
விடுதலையாகத்
தெரியும் வழியை
தெளிவுறத் தெரிவோம்.

எண்ணம் சொல் செயல்
எதுவாகிடிலும்
“எனக்கு" “எனது”
உணர்வை விலக்கி

விரும்பும் விளைவுக்காய்
வினை புரியாமல்
செய்யுங் கடமை
சீராய்ச் செய்வோம்.

விளைவெதுவாயினும்
இயல்பாய் ஏற்போம்.
அடிப்படைத் தேவைகள்
அளவுறத் தெரிந்து

அளவா யுழைப்போம்.
அணுக்கமாய் வாழ்வோம்.
ஒப்பிடல் தவிர்த்து
ஒழுக்கமாய் வாழ்வோம்.

எத்தனை சேர்த்தால்
போது மென்பது
எவரும் அறியா(த)
விதியெனத் தெளிவோம்.

எத்தனை சேர்த்தும்
எதுவும் வராது
போகுங் காலை
போகணுந் தனியே.

அகந்தை யகல
அகப்படும் அமைதி.
ஆணவந் தொலைக்க
காணலாம் நிறைவு.

தன்னைத் தானே
விழுங்கும் அரவாய்
நம்மை நாமே
நசித்தல் தகுமோ?

தன்னை முன்னிலைப்
படுத்தல் தவிர்க்க
தானே யவிழும்
தளைகள் யாவும்.

எச்சூழலிலும்
எது நேரிடினும்
எளிதாய்க் கடக்கும்
இயல்பைப் பெறலாம்.

இருக்கும் வரைக்கும்
இருக்கலாம் மகிழ்வாய்.
போகுங் கணத்தில்
போகலாம் நிறைவாய்.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (26-Aug-14, 11:22 am)
சேர்த்தது : L Swaminathan
பார்வை : 65

மேலே