தூது செல்லாயோ

சிட்டுக் குருவி
சிட்டுக் குருவி
ஒரு தடவை நீ
தூது போவாயா?

அசைத்துப் பறக்க
இறக்கை உண்டு
உனக்கு அமர்ந்து
களைப்பாற மலையும்
உண்டு உனக்கு..!!

பசிக்குச் சுவைக்க
உயர்ந்த மரத்தில்
கனியுண்டு உனக்கு
அருந்திக் குளிக்க
அருவியும் உண்டு
திசை அறியும்
உணர்வும் உண்டு
உனக்கு...!!

நாடு விட்டு நாடு
செல்ல அனுமதி
அதிகம் உன்டு
உன் சின்ன
இதயத்தில் இரக்கம்
கொண்டு சேர்த்து
வைப்பாயா என்
துணையைக்
கண்டு......!!!

ஆசை வார்த்தை
பேசி ஆழமாய்
நெஞ்சில் அமர்ந்து
அளவில்லாத் துன்பம்
தந்து மறைந்தே
இருக்கும்
என்னவனைக் கண்டு
என் சோகம் சொல்லி
விட வேண்டும் நீ
சென்று...!!!

கண்ட நொடியே
கூறிவிடு அவனிடம்
மெதுவாகத் துடிக்கும்
என் இதயம்
தவிப்பதையும் கவி
வடிக்கும் என் கண்கள்
நீர் வடிப்பதையும் காற்றில்
கரையும் கற்பூரமாய் நான்
கரைகின்றேன் என்று
விரைவாகச் சொல்லி விடு..!!

தாலி ஒன்று நான்
கேட்க வில்லை
வேலி போட்டுத்
தடுக்கவில்லை அலை
அலையாக ஆசை
வந்தாலும் அன்பை
மட்டும் அடுக்கி வைத்தேன்
அவன் வருகைக்காக
அதையும் நீ அறிவுரையாக
கூறிவிடு...!!

தூது சென்று நீ
வருகையிலே என்
வீட்டில் உனக்காக
ஒரு கூடு உண்டு
தோழியாக நான்
உண்டு என்
சிட்டுக்குருவியே
நீ சிட்டாய்ப்பறந்து
வா சினேகிதியே..!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (31-Aug-14, 7:34 am)
பார்வை : 84

மேலே