சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது---அஹமது அலி----

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது...!

ஏகாந்தம்
ஏகோபித்து
ஏக்கம் தரும் வேளை....

ஏகராசி
எங்குமெங்கும்
ஏந்திழையைச் சூழ...

ஏறுமாறு
எண்ணங்கள்
ஏவல் செய்ய
என் செய்வாள்..?

இளந்தையிவள்
இறுமாப்பில் இருந்தாலும்
இயற்கையிவளை
இசைந்து போகுமோ..?

இன்னது
இன்னமும்
இன்னல்கள் புரிய
இவள் நிலையாது..?

உள்ளார்ந்த
உயிரன்பு
உகுத்திட
உற்றவன் உடனில்லை....

உதயன் உதித்து
ஊரடங்கி மீண்டும்
உதித்து வரும்வரை
உபரியாய் உயிர் வாடுகிறது...

தான்கொண்ட
தனிநிலை
தற்காலம் என்றாலும்
தாளாது போகுதே...

தலைவன் வரும்
தகவல் வந்தாலொழிய
தலைவியிவள்
தாரை நில்லாது.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (3-Sep-14, 7:58 pm)
பார்வை : 262

மேலே