யோசி மகனே யோசி =புதுக்கவிதை=

இதயப் பரிமாற்றம்
இதழ்களின் வழியா
இல்லை
இலவசங்களின் வழியா?

அதிகார வலை வீச்சில்
ஆன்மா நொடிந்து போக
அதுவென்ன
மீனவனின் உடைமையா?

அரசியல் என்றாலே
ஏராளமாக எழுதித்
தாராளமாக ஏமாற்றுவதுதானே!
வேண்டுமானால்
இதை நீங்கள்
அரசியல் சட்டமென்றும்
சொல்லிக்கொள்ளலாம்!

எழுத்தை விதைப்பவன்
கொழுத்த அறுவடைக்காரன்!
அதனால்தானே இப்பொழுதெல்லாம்
எழுதத் தெரிந்தவனையே
அரசியலுக்கு அழைக்கிறோம்!

செயல்முறை என்பது
எழுத்தைச் செயல்படுத்துவதல்ல
எழுத்தை விதைப்பதுதான்!

அறுவடையை விரும்புபவன்
விதை,நிலத்தில் கவனம் வைக்க வேண்டும்!
எல்லா விதைகளும்
எல்லா நிலத்திலும் வளர்ந்துவிடாது!

ஒருவன் அணில் ஆவதிலும்
அனுமான் ஆவதிலும்
உள்ள சூட்சுமமே அதில்தான்!
எழுத்தைப் படித்துப் பயனில்லை!
எழுத்தை ஆளுமை செய்யப் பழகு!
எழுத்தை ஆளுமை செய்ய வாசி!
அதற்காகவே வசிக்கப் பழகிக்கொள்!
உன் செயல்முறை மாறும்பொழுது
அனுபவமும் மாறிப்போகும்!
யோசி மகனே யோசி!
எல்லாம் அவனவன் எழுத்தே!
இதை
எல்லா இந்தியனும் அறிவான்!
==++==

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (4-Sep-14, 9:52 pm)
பார்வை : 88

மேலே