செகப்பி

செகப்பி தலை தெறிக்க ஓடினாள். அந்த ராத்திரி வேளையில் நடு ஜாமத்தில் பௌர்ணமி வெளிச்சத்தில் அந்த காட்டின் புதர்களின் ஊடே தட்டு தடுமாறி ஓடினாள். இன்னும் கொஞ்சம் தூரம்தான்.. ஓடு..ஓடு.. நின்னுடாதே..நீர் வீழ்ச்சிக்கு பக்கத்துல போயிடலாம்.. ஓடு..ஓடு! .. அந்தக் குளிரிலும் வியர்வை வழிய வழிய ஓடிக்கொண்டிருந்தவள் எதிர்பட்ட பாறை ஒன்றில் கொஞ்சம் உட்கார நினைத்து அமரப் போனாள். என்னவோ நினைத்தவளாய் மறுபடியும் ஓடத் துவங்கினாள்...

முன் ஜாமத்தில் அந்த ஆதிவாசிக் கூட்டத்தில் நடந்த பேச்சை மனதில் அசை போட்டவளாய் கொஞ்சம் நடக்க ஆரம்பித்தாள்..

அது குறும்பரை மலை கிராமம். அங்கே தலைக்கட்டு எனப்படும் அந்த கூட்டத்தின் தலைவன் .. கிழவன் பேசிக்கொண்டிருந்தான்..
" ஏலே..செகப்பியோட கூட்டுக்காரன் (புருஷன்) யானை மிதிச்சி கொஞ்ச கொஞ்சமா செத்துகிட்டு வாரான்..இன்னும் நாலு அஞ்சி ராவு தாங்க மாட்டான்.. அவன் கவுந்ததும் நம்ம வழக்கப்படி அவனோட மூத்தவன் காளனோட செகப்பியப் போய் இருந்துக்க சொல்லிடுங்க..வெவரத்த ரெண்டு பேராண்டையும் சொல்லிப்பிடுங்க ..என்னா .. நான் சொல்றது..போற மூச்சு பொசுக்குன்னு போறதுக்கு மின்னால வெவரம் தெரிஞ்சிக்கிட்டுதான் போவட்டுமே...." சொல்லிவிட்டு இடி இடி என சிரித்தான் கிழவன்.. காளன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்..

மரத்துக்கு பின்னால் ஒளிந்து கேட்டுகொண்டிருந்த செகப்பிக்கு உடலெல்லாம் கம்பளி பூச்சி ஊர்வது போல இருந்தது . ஏதோ தொண்டையை அடைப்பது போல இருந்ததால் மெல்ல நழுவி தன குடிசைக்கு வந்தாள். குத்தங்காலிட்டு உட்கார்ந்தபடியே அவள் புருஷன் சோமனை பார்த்து கொண்டிருந்தாள். 'செகப்பி.." ஈன சுரத்தில் அவளை அவன் கூப்பிட்டான். "ஊம்" கொட்டிய அவள் கால் பாதத்தை மெலிதாக வருடியபடி " செகப்பி.... ம் ...ம் ..நீ என்னோட சேந்து ஒரு முழு நெலா கூட ஆவல..அதுக்குள்ள..ம்..தலைக்கட்டு என்ன சொல்வான்னு எனக்கு தெரியும்.. நீ அத கேட்டுக்கோ..ம்.." என்று முக்கி முக்கி குழறினான்.

தலையில் அடித்துக் கொண்ட செகப்பி, " தா.. பேசாத.." என்று சொல்லி முடிக்குமுன் ஆறாக கண்ணில் நீர் பெருக அவனை இறுகப் பற்றிக்கொண்டாள். அவளுக்கு தெரியும் .. அந்தக் கூட்டத்தில் அப்படித்தான் என்பது! பின்னாடி குடிசை கருத்தானுக்கு அப்படி ஏற்பட்டதுதான் மூன்று கூட்டுக்காரிகளும்.. மூத்தாள்களும் இதை மறுப்பதில்லை.. ஆனால்..செகப்பிக்கு அது அருவருப்பாகவே பட்டது..

'சீ.." அவள் மனதில் வந்த ஒரே சொல் அதுதான்..

கொஞ்ச நேரத்தில் சோமனின் மூச்சு நின்று போயிருந்தது.

ஓடு.. ஓடு..

பின்னால் ஆறேழு பேர் துரத்தி வருவது கண்டுதான்.. செகப்பி அப்படி ஓடி கொண்டிருந்தாள் ..
திடீரென ஒரு சரிவில் கால் தடுக்கி விழுந்தவளை தாங்கி பிடித்தது ஒரு முரட்டுக் கரம்..
""காளா.." அவள் தோளில் ஒரு கையையும் இடுப்பில் ஒரு கையையும் சுற்றி வளைத்த காளன் அவளை நெருக்கினான்..
அவன் கால்களை இடறிய செகப்பி அவனோடு சேர்ந்து உருளத் தொடங்கினாள். "ஹோ " வென்ற இரைச்சலோடு விழுந்து கொண்டிருந்த நீர் வீழ்ச்சியை நோக்கி உருண்டாள். காளன் தன் முழு பலத்தை பிரயோகித்தும் அவளது வெறி பிடித்த பலத்திற்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் உருண்டு கொண்டிருந்தான்..
இதோ.. இன்னும் நாலு அடி கூட இருக்காது..மெல்ல ..மெல்ல நெருங்கினாள் அந்த முகட்டை.. எட்டி உதைத்து தப்பிக்க நினைத்து "ஹேய்..." என்று கூச்சலிட்ட காளனின் தலையில் கையில் கிடைத்த கூர்மையான பாறைச் செதிலை ஓங்கி அடித்தாள்..
மயங்கிய அவனோடு சேர்ந்து அந்த உயரமான நீர் வீழ்ச்சியில் விழுந்தாள்.
..
இருநூறு வருஷங்களுக்கு முன் நடந்ததாக சொல்லப்படுகிற இந்த விஷயத்துக்கு பிறகு இன்று வரை அந்த நீர்வீழ்ச்சி நடுவே நீர் விழுகிற இடத்தின் நடுவில் உள்ள அந்த ஒற்றைப் பாறைக்கு செகப்பி பாறை என்றும் அதற்கு பௌர்ணமி அன்று இரவு பூஜையும் நடந்து வருவதாகவும் அந்த நீர் வீழ்ச்சியில் அன்று இரவு முழுதும் நீர் வீழ்ச்சி வெகு அமைதியாக வீழ்ந்து கொண்டிருப்பதை காண முடிகிறது என்கிறார்கள். .. அந்த மலை கிராம மக்கள்.

எழுதியவர் : karuna (13-Sep-14, 5:55 pm)
பார்வை : 208

மேலே