பனித்துளி திருப்பள்ளி எழுச்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆரியநன் நாட்டினிலே அமைதி யாக
---அயர்ந்துறங்கும் பனித்துளியே எழுவாய் மெல்ல
சீரியதோர் இயற்கைத்தாய் ஈன்ற அன்புச்
---சீதனமே கண்மலராய் எழில்வ னப்பே
பாரியையும் பேகனையும் கபிலன் பாட
---பனித்துளியே உனைப்பாட நானும் வந்தேன்
சூரியனும் உனைசேர வந்துள் ளானே
---சுடரொளியே திருப்பள்ளி எழுந்தரு ளாயே !
நடுநிசியில் நிலவுந்தான் தேய்வ தாலே
---நலிவுற்று நிலத்தாயும் சிந்திய நீரே
அடுக்கடுக்காய் வளர்ந்துநிற்கும் மலரி தழ்மேல்
---அனாமத்தாய் உறங்குகின்ற அதிசயத் தேனே
துடுப்பொத்த கொடியிடையாள் புல்லும் மெல்லத்
---தூங்குகையில் காற்றுவந்து சூட்டிய பூவே
படுத்துறங்கி யதுபோதும் கண்மல ராயே
---பளிங்கன்ன பட்டேபள் ளிஎழுந்தரு ளாயே !
-விவேக்பாரதி