சந்திப்போமா
சாலை ஓரமதில்
வாகனப் புகை..
எந்நேரமும் எங்கோ
பார்த்தபடி ..அவன்!
தாடியும் மீசையும்
தூசி படிந்த தலையுடனும்
மாதக் கணக்கை அங்கே
மாட்டி வாய்த்த படம் போல் ..அவன்!
யார் நீ என்றால் தலை சொறிவான்!
எது கேட்டாலும் சிரித்திடுவான் !
இன்று வரை அவன் பேசி கேட்டதில்லை - யாரும்
இது வரையில் அவன் கதையை அறிந்ததில்லை!
மூளை வளர்ச்சி இல்லா மானிடன் இவன்
என்று ஏளனமாய் பார்க்கும் பார்வைகளை
புறம் தள்ளி சிரிக்கின்றான்
அந்த பெரு வாழ்வை அடைந்திட்ட
முன்னாள் பெரும் செல்வன்..
என்ன அவன் பேரோ?
யாது அவன் ஊரோ?
கிடைத்ததை உண்டு தெருவினில் படுத்து
தேடுகிறான் .. அவன் தேவதையை!
சாலைகளின் சந்திப்பில்
அவள் சந்திப்பை எதிர் நோக்குகிறான்!