காதலின் பூரணமே கண்ணம்மா
அப்படி என்னை பார்க்காதே
எல்லைமீறிய
என்
ஆழ்மன ஆசைகளெல்லாம்
அடைபட்டு துடிக்குதடி
உன் ஆணவ பார்வைக்குள்!
அந்த சிறைக்குள் சிக்கி
திக்கி திணறும்
என் வார்த்தைகள் படும்பாடு
நீ அறிய நியாயமில்லை
ஏனெனில் ?
உன் போல்
இதயத்தை இழைகொள்ளும்
இந்திரப்பார்வை எனக்கில்லை.
அன்றாட அலுவலுக்கிடையில்
அனிச்சையாய் மோதினாலும்
பூகம்பம் வந்த பூமியாய்
உன் பார்வைபட்டு
பாழாகுதடி என் பருவம்
மொழிப்போர் என்றால் கூட
மோதி பார்த்துவிடலாம்
நீ நடத்தும்
விழிப்போரில் தானடி
வீழ்கின்றேன் நான்
அது என்ன பார்வைதானா?
இல்லை
என் இளமைக்கான பலிபீடமா?
என் கூச்சங்களை
கூறுபோடுகிறதே.
அய்யோ!
நேசம் வடியவிட்டு - ஒரு
ஆசை பார்வையினை
மீண்டும் எனை நோக்கி
வீசி எறியாதேடி
கள்ள பூனை ஒன்று
கவிழ்த்திட்ட கடமாய் இன்று
சிறிதும் மிச்சமின்றி
சிதறிப்போகுதடி - நான்
சேர்த்துவைத்த கர்வங்கள்!