“ வேண்டும் மீண்டும் “

வெந்தழிந்த சாம்பல்கூட நிதம்
உந்தன் பெயரை சொல்வதென்ன
வேதனைகள் வந்தபின்னும் வரம்
வேண்டி அது வந்ததென்ன...!!!

காதலதைச் சொல்லவந்து பாவம்
காலமாகி நின்ற தென்ன
தீதென்று தெரிந்தும் உன்னை
தீண்ட மீண்டும் துடிப்பதென்ன

சற்று பார்த்த ஓர்நொடியே
சங்கமித்து போயி ருந்தேன்
உற்றுபார்த்து இன்னும் உன்னுள்
உள்ளுருகி போக வேண்டும்

விரல்கள் தந்த ஸ்பரிசமென-மது
விழிகள் தந்த கதகதப்பில் அந்த
தருணம் மீண்டும் வரவேண்டும்
தவிப்பதை நிதமும் தரவேண்டும்

நித்தம் உன்னை நினைத்தேஎன்
நிமிடம் கரைந்தது போகவேண்டும்
சித்தம் முழுதும் உந்தன்பிம்பம்
சிலையெனவே மாற வேண்டும்

அத்தனையும் மீண்டும் என்னை
ஆட்கொண்டு போக வேண்டும்
ஆயுள் முழுதும் இதுபோலே
அமிழ்தினிய நினைவு வேண்டும்

எழுதியவர் :  வேத்தகன் (11-Nov-14, 11:16 am)
பார்வை : 95

மேலே