சங்கமம் - கருணா

இரவு மணி பத்தாகி விட்டது..
திருச்சியை விட்டு பக்கத்து ஊர்களுக்கு ..கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி மிக குறைவுதான்.. மழை தூற ஆரம்பிக்கவே..ஜெயந்த் ஒரு டாக்சியை அழைத்தான்.
"குழுமணி போகணும்"
"போலாம் சார்"
"எங்கியாச்சும் சின்ன டீக்கடையில நிறுத்துங்க டிரைவர்.."
கார் ஒரு டீக்கடையின் முன்னே நின்றது ..
"வரீங்களா டிரைவர்..நீங்களும் டீ சாப்பிடறீங்களா?"
இருவரும் டி குடித்து முடித்த பின், ஜெயந்த் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு இருட்டில் ...மெல்லிய தூரலில்..நடந்தான்..டிரைவர் வீட்டுக்கு போனில் பேசிக்கொண்டிருந்தான்..
ஜெயந்த் சில்லென வீசிய குளிர் காற்றை அனுபவித்தபடி..மனதில் அந்த இன்பமான நாட்களையும் இன்பத்துக்கு காரணமான பெண்மணியையும் சந்திக்க போவதை எண்ணி கொஞ்சம் பரபரப்பு மனதில் சூழ்வதையும் "இரு..இரு.." அடக்கிக் கொண்டும் இருந்ததை டிரைவர் உணர முடியாது என்பதால் மெல்ல தனக்குள் சிரித்தபடி காரினுள் வந்து அமர்ந்தான்.
….
தூரம் ஓட வைத்திருக்கிறது..எத்தனை இரவுகள் உறக்கமில்லாமல் புரள வைத்திருக்கிறது..அவனுடைய பதினாறு வயதில் தொடங்கி பத்தொன்பது வரை..

மீனு..

அந்த ஒரு வார்த்தை அவளைப் பிரிந்து எங்கோ சென்று ...வாழ்ந்து..இதோ இத்தனை ஆண்டுகள் கழித்து ..இன்னும் மனம் புரியாமலே வாழ்க்கையை அவள் நினைவிலேயே கடத்தி ... பதினைந்து ஆண்டுகளுக்கு பின் அவள் வீட்டில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது..

மீனு.. அவனை விட ஒரு வயது பெரியவள்..
சாமா ஐயரின் நான்காவது பெண்..கோயில் அர்ச்சகரான அவரது சொற்ப வருமானத்தில் ரெண்டு ..மூணுன்னு.. போட்டு எப்படியோ மூன்று பெண்களை கட்டிக் கொடுத்தவர் மீனுவுக்கு கலியாணம் செய்வதற்கு படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார்.. ஆஸ்துமா அவதியில் நலிந்த மனைவியும்..மீனு..மற்றும் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இரண்டாவது பெண்ணுமாக..குடும்பத்தை ஒட்டிக் கொண்டிருந்தார் பெருமாளையே நம்பி..

அப்போதுதான்.. மீனுவிடம் கணக்கும் ஆங்கிலமும் கற்றுக் கொடுக்க சொல்லி ஜெயந்த்தின் அப்பா சொன்னதற்கு சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் சாமா. மாதம் அறுபது ருபாய் ..மாதம் முழுக்க தட்டில் வந்து விழு சில்லறைகள் கூட இந்த அளவுக்கு வராது..

தினமும்..மாலை ஒரு மணி நேரம் கணக்கும்..ஒரு மணி நேரம் ஆங்கிலமும்..என்று ஒப்புக் கொண்டார்..

மீனு ...

அழகுச் சிலை .. தாவணியில் இறுக்கமான ரவிக்கையுடன் அவள் வாளிப்பு.. கணக்கையும் ஆங்கிலத்தையும் வெகு விரைவாக கற்றுக் கொடுத்ததோடு.. அவள் மீது காதலையும் வளர்த்து வந்தது..

" ஜெயந்த்.. இந்த கால் பரிட்சையில் கணக்கில் என்பதும் ஆங்கிலத்தில் எண்பத்தி இரண்டும் வாங்கி விட்டே போலருக்கே.. பேஷ்..பேஷ்.." என்று சொல்லியபடி அவனைக் கடந்த சாமாவை மரியாதையுடன் பார்த்த ஜெயந்த்..மீனுவிடம், " நான் வேண்ணா நாள்ல இருந்து காலைல ஒரு மணி நேரம் வரட்டுமா .. கணக்கில நூறு எடுக்க முடியும்னு தோண்றது.." என்று இழுத்தான்..

" ம்... எனக்கொண்ணும் இல்லப்பா.. ஆனா.. காலைல அஞ்சரை மணிக்கு வரணும்..தெரியோமோல்லியோ." என்றால் மீனு..

கரும்பு தின்னக் கூலி வேணுமான்னு எவன் சொல்லி வெச்சு போனானோ .. ஜெயந்த்துக்கு அந்த நிலைதான்..

மீனுவோட இன்னும் ஒரு மணி நேரம் தினமும்.. நினைக்கும் போதே மனசுக்குள் மறுபடியும் இளம் சூடு..பரவியது..

அப்புறம்.. ஆண்டுகள் ஓட .. அவளைப் பார்க்காத நாளே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது.. ஜெயந்த் ஒரு நாள் காவேரி ஆற்றுக்கு அவளோடு போய் திரும்பி கொண்டிருந்தான்.. ஊர்க்கதையெல்லாம் பேசி ...கொஞ்சம் இடைவெளி விட்டு மறுபடியும் பேச தொடங்கினாள் மீனு..

'ஜெயந்த்.. இந்த ஆம்பிள்ளகல்லாம் என் இப்படி மாமனார் வீட்டுலருந்து எல்லாம் வரணும்னு எதிர் பார்க்கிறாங்க.. "

" அப்படியில்ல மீனு.. எல்லாரும் அப்படியில்ல.. "

"நீ அப்படி இருப்பியா.. "

"நிச்சயமா.."

"Good .. " என்று சொல்லி விட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் நடந்தாள் மீனு..

பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் வேண்டுமென்றே பொறுமையாக நடந்தார்கள் இருவரும்.

ஏதோ தோன்ற.. சட்டென்று அவள் கைய நடுங்கும் விரல்களால் மெல்ல பிடித்த ஜெயந்தை பார்த்த மீனு .. " என்ன ஜெயந்த்.." என்றாள்.

"மீனு.. ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே.. "
"சொல்லு ஜெயந்த்.."

" நான்..நான்.. " தொண்டை அடைத்தது ஜெயந்த்துக்கு.

" என்ன .. "

" மீனு.."

" நான்.. நீ எனக்கு கிடைப்பியா மீனு.."

சற்றும் எதிர்பார்க்காதவளாய் மீனு, " ஜெயந்த்.. தப்பு பண்ற ஜெயந்த் ..இதெல்லாம் நடக்குற விஷயமான்னு மொதல்ல யோசி.." என்று சொல்லி விட்டு அமைதியாக நடந்தாள்.

" இல்ல மீனு..
" இல்ல மீனு.. நடக்குறதும் நடக்காததும் பத்தி இப்ப பேச வேண்டாம்.. நீ என்ன ஏத்துப்பியா..சொல்லு"

நின்றாள் மீனு..

" நாளைக்கு சொல்றேன்.. ஒரு நாள் பொறுத்துக்கோ ஜெயந்த்.."

" அதுவரைக்கும்.. இல்ல ..இல்ல.. இந்த கைய கொஞ்ச நேரம் பிடிச்சுட்டு நடந்து வரலாமா.."

"இந்த குறும்பு தானே.. என்ன ஒரு நாள் டயம் கேட்க சொல்லுது.." என்று சிரித்தபடி நடந்தாள்..மீனு.

மறுநாள் .. நல்ல ஜுரம் ஜெயந்துக்கு.. வெளியி நல்ல மழை.. வீதியில் ஒரே சகதிக் காடாய் ..நாசா நாசா என்று இருந்தது..

ஜெயந்த் முனகினான்..

கஷாயம் வைத்துக் கொண்டு வந்த அவன் அம்மாவை உற்றுப் பார்த்தான்..
இவளிடம் இப்போது சொல்ல வேண்டாம் .. என்றூ நினைத்து திரும்பி படுத்துக் கொண்டான்.

அவனை மெல்ல திருப்பினாள் அம்மா.

" ஜெயந்த் .. இன்னிக்கி சாமா அய்யரோட பொண்ணு மீனாவ பாக்க வரன் வந்துட்டு போயிருக்கா தெரியுமோ.. வரனுக்கு வயசு நாப்பதாம்.. பொண்டாட்டி செத்து நாலு வருஷமாச்சாம்.. பாவம்' என்றபடி அடுக்களிக்குள் புகுந்தாள்.

'அம்மா.."

என்னப்பா..

" ஒண்ணுமில்லம்மா.. '

"ஏண்டா....வைத்தியர் வீட்டுக்கு போலாமா.. ஜுரத்தில கண்ணுல இருந்து எண்டா இப்படி ஜலமா கொட்றது.."

" வேண்டாம்மா.. சரியாயிடும்"

....

சேரில் அமர்ந்திருந்த ஜெயந்த் அருகே வந்து அமர்ந்த மீனு, " அப்புறம் சொல்லு ஜெயந்த்.. பம்பாயிலேர்ந்து எப்ப வந்த.. நடுவில யு..எஸ். போயிருந்தேன்னு கேள்விப் பட்டேன் ..ஆமா நா இங்கருக்கன்னு எப்படி தெரியும்.." என்றாள்.

" மீனு.. ஒரு நாள் டயம் கேட்டு போன நீ மறு நாள் இன்னொருத்தருக்கு வாக்கப் படப் போற சேதிய கேள்விப்பட்டு கொதிச்ச என்னால எதுவும் பண்ண முடியல .. இருந்தாலும் ஒன் கல்யாணத்த பாக்க கூட இருக்ககூடாதுன்னு தான்..தொலைஞ்சி போனேன்..மேல படிக்க போனேன்..எல்லாத்தையும் மறந்தேன்.. உன்னத் தவிர.."

"" ஆனா.. உனக்கு ஏன் மீனு இப்படி ஆச்சு.. கல்யாணமாகி ஒரு வருஷத்தில ஒன் புருஷன் கிட்ட இருந்து எதுக்காக விவாகரத்து வரைக்கும் போயி ..இடையில அந்த ஆளும் இறந்து போயி.."

" உனக்கு இதெல்லாம் .."

:"தெரிஞ்சுது.. ரொம்ப லேட்டா.. இப்ப அப்பாவும் இல்லாம.. எப்படி..அக்க திரும்பி வீட்டுக்கு போய்ட்டாளாமே.. இப்ப யாரு ஒனக்கு துணை.. "

"ம்ம். அம்மாவும் போய் சேர்ந்த பிறகு ஊர்லருந்து வந்து என்னோட பாட்டிதான் துணையா இருக்கா "

"ஒரு சந்தேகப் பிராணியோட..ஒரு மிருகத்தோட.வாழ்ந்த ஒரு வருஷ வாழ்க்கை எல்லாத்தையும் மறந்து இப்ப பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து கிட்டு எப்படியோ ஓடறேன்.."
" அது போவட்டும்.. ஒனக்கு கல்யாணம் ஆயிடுச்சா.. எத்தினி பிள்ளைங்க .."

" ம்ம்.. ஆய்டிச்சு .. ஆனா பிள்ளைங்க இல்ல.."
"ஏன்"
" மனசுக்குள்ள ஆன கல்யாணம்..என் மீனுவோட..அதால தான்.."
"என்ன சொல்ற நீ.."

"மீனு.. அம்மா எவ்வளவு சொல்லியும் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கவே இல்ல.. உன் நினைப்பிலேயே ஒட்டிட பழகி விட்டேன்..அப்புறம் அம்மாவும் கொஞ்ச நாள்ல ஒடம்புக்கு முடியாம அப்பா போன எடத்துக்கே போய் சேந்துட்டா..நானும் மறுபடியும் இங்க வந்து பம்பாயில இருக்கேன்.. "

இருவரது பார்வைகளும் சந்தித்தன..

"மீனு..இப்பவாவது ஒன் கைய நான் பிடிச்சுக்கவா.."

அங்கே காதல் சங்கமம் ஆனது!

எழுதியவர் : கருணா (21-Nov-14, 12:05 pm)
பார்வை : 227

மேலே