பெண் என்ற பதுமைக்குப் பின்னால்

பெண் என்ற பதுமைக்குப் பின்னால்.................!

பெண் என்பவள் அழகானவள்! மென்மையானவள் மேன்மையானவளும் கூட! சில பெண்களின் வாழ்வில் அனுபவிக்கும் ஒரு துன்பத்தை இக்கட்டுரை மூலம் சிறிதளவு எனக்குத் தெரிந்தவரை எடுத்துரைக்க முயன்றுள்ளேன்!

பெண் என்பவள் பலருக்கு பாரமானவள். பிறக்கும் பொழுது பெற்றோருக்கு வளரும்பொழுது உடன்பிறந்தவர்களுக்கு, வளர்ந்த பின்பும் முன்பும் அவளை அணைக்கத் துடிப்பவர்களுக்கு, திருமணத்திற்குப் பின் கணவருக்கு, தாயான பின் பிள்ளைகளுக்கு, முதுமையடந்தபின் பேரப்பிள்ளைகளுக்கும் பலநேரங்களில் தான் உறங்கும் கட்டிலுக்கும் கூட பாரம் தான்! இது எல்லாக் குடும்பத்திலுமல்ல ஒருசிலக் குடும்பங்களில்........

ஒரு பெண்குழந்தை பிறந்தாலே பல பெற்றோர்கள் அவளை ஒரு பாரமாகவே நினைக்கின்றனர்! அவளை எப்படியாவது எவனிடமாவது திருமணம் என்ற பெயரை சொல்லி தள்ளிவிடப் பார்க்கின்ற பெற்றோர்கள் அதிகம்! அதிலும் பல பெண்கள் வயதுவந்த உடனேயே திருமண வாழ்விற்குள்ளும் தகாத உறவுக்குள்ளும் தள்ளப் படுகின்றனர்! திருமண பந்தத்தில் இணைக்கப் படும் பெண்களின் வாழ்வு ஒரு வகைஎன்றால் பாலியல் தொழிலுக்குள் தள்ளப் படும் பெண்களின் நிலைமை இன்னொரு விதம். எப்படியோ பெண்ணிற்கு அவலங்கள் பல வழிகளில் இழைக்கப் படுகின்றன.

ஒரு பெண்ணை திருமண உறவுக்குள்ளோ இல்லை தகாத வாழ்விற்குள்ளோ தள்ளுமுன் யாரும் அப்பெண் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ அவ்வாழ்விற்கு தயார்தானா என்று யாரும் யோசிப்பதில்லை. பல பெண்களின் வாழ்வு சிறுவயதிலேயே சீரழிக்கப் படுகின்றன. பலருக்கு சிறுவயதிலேயே திருமணமும் முடிந்துவிடுகிறது. அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் திருமண வாழ்விற்குரிய மனப் பக்குவத்தை எட்டியிருக்கிறாளா? இல்லை உடல் ரீதியாக வளர்ச்சியடைந்திருக்கிறாளா என்று சற்றும் யோசிப்பதில்லை. அவர்கள் யோசிக்காவிட்டாலும் அவளை மணமுடிக்கும் ஆண்கள் சற்றேனும் யோசிப்பார்களா தெரியவில்லை! ஒரு பெண் எப்பொழுது முழுமையாக பெண்ணாகிறாள் என்றால் அவள் தாயாகும் பொழுது! ஒரு தாய்க்கு மிக முக்கியமான ஒன்று கருப்பை! பெண்ணிற்கு கருப்பை இருப்பதினாலே தான் அவள் பெண்ணென்றே அழைக்கப் படுகிறாள் பெண்ணிற்கான முழுவடிவமும் பெறுகிறாள்!

பல பெண்களுக்கு இக்கருப்பையே பல பிரச்சனைகளை உருவாக்குகிறது! அதற்கு அவளை சார்ந்தவர்கள் எந்தெந்த வகையில் சாதகமாக இருக்கிறார்களென்பதை பார்த்தோமென்றால், முதலாவது பெற்றோர் மூலமாக, தங்கள் குழந்தை உடல் ரீதியாக தயாராவதற்கு முன்பதாகவே தங்கள் கடமை முடிந்தால் போதுமென்று திருமணம் முடித்துக் கொடுப்பது. இரண்டாவது கணவன், அவளின் பெரும்பாலான துன்பங்களுக்கு இக் கணவனின் பங்கு இன்றியமையாதது.

திருமணம் முடிந்தபின் அப்பெண் உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ தயார் தானா என்பதை அறியாமலே உடலுறவில் அவளை ஈடுபடச் செய்தல். அப்படி உடலுறவின் போது சில மோசமான அணுகுமுறைகளை கையாள்தல் அவளுக்கு இன்னல்களை விளைவிக்கிறது. விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபடுவது, கட்டாயமாக உடலுறவு கொள்வது, ஒரு பெண்ணிற்கு திருப்தி ஏற்படுத்தும் வகையில் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது இதுவும் பல வழிகளில் ஒரு பெண்ணின் கருப்பை சேதமடைய காரணமாகிறது.

கூடவே அவளை தாய்மையடையச் செய்தல். பல ஆண்களுக்கு தான் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகிவிட்டால் தான், தான் தனது ஆண்மையை நிரூபித்ததாய் தங்களை அடையாள படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அப்பெண்ணின் கருப்பை இக்குழந்தையை சுமக்க தகுதியானது தானா என்று சற்றும் யோசிப்பதில்லை.குழந்தை பெற்றுக் கொள்வது பெரும் பாக்கியம் தான், ஆனால், குழந்தை பெற்றுக் கொள்வதை விட அக்குழந்தையை சுமக்கும் தாய் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பக்குவப் படவேண்டுமென்பது மிகவும் அவசியம்.

மேலும் கர்ப்பகாலத்தில் பெரும்பாலானோர் சுகப் பிரசவத்தையே விரும்புகின்றனர். ஒரு பிரசவத்தின் பொது ஒரு பெண் அடையும் வேதனை தாங்கொண்ணாவேதனை. தன் நாடி நரம்புகள் அத்தனையும் வலிக்க அந்த வலிகளத்தனையும் பொறுத்துக் கொண்டுதான் இவ்வுலகிற்கு ஒரு புதிய ஜீவனை அறிமுகப் படுத்துகிறாள் ஒருபெண். அச்சமயத்தில் அவளின் கருப்பை குறிப்பிட்ட அளவு வெளிவந்து தான் ஒரு குழந்தையை பிரசவிக்கிறது. அந்நேரம் கடைசியாக வரும் வலியின் போது பலருக்கு கருப்பை வெளியே கூட வந்து விடுகிறது. பிரசவத்தின் பின்பு கருப்பை திரும்பவும் உள்ளே செல்வதற்கான முறையான பயிற்சிகள் மருத்துவர்களால் சொல்லித்தரப் படவேண்டும் பல மருத்துவர்கள் இதை சொல்லிக் கொடுப்பதேயில்லை. தாய்மைப் பேற்றின் போது வீட்டிலும் மருத்துவ மனையிலும் அளிக்கப் படும் சிகிட்சைகள் பலருக்கு சரியாக அமைவதில்லை. பல பெண்கள் நாட்டுமருந்துகள் வெந்நீர் போன்றவை சரியாக கையாளாததினால் கூட கருப்பை திரும்ப அதற்கான இடத்தில் சரியாக பொருந்துவதில்லை.

அதிக எடைகளை தூக்குவதினாலும் வலிமையான வேலைகளை செய்வதினாலும் கூட ஒரு பெண்ணின் கருப்பை வெளியில் வர ஆரம்பிக்கிறது. இதனால் அப்பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகிறாள். பலருக்கு இதைப் பற்றின விஷயங்கள் பரவலாகத் தெரிவதில்லை. எனவே ஒரு பெண்ணைக் குறித்த கரிசனைகள் அவளை சார்ந்தவர்களுக்கு மிகவும் அவசியம். ஒரு பெண்ணின் தாய்மைக்குப் பின்னதான ரகசியம் மாபெரிது. பெண் என்பவளை பெண்ணாகவும் பதுமையாகவும் போதைப் பொருளாகவும் பாராமல் அவளுக்குள்ளிருக்கும் பல அதிசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டால் மட்டுமே அவளால் இன்னும் பல தலைமுறைகளைத் தன்னுள் தாங்க முடியும். பல மருத்துவர்கள் இம்மாதிரியான பிரச்சனைகளின் பொது அதை அகற்றிவிட ஆலோசனை கொடுக்கின்றனர். ஆனால் கருப்பையை அகற்றாமல் கூட அதற்குரிய இடத்தில் அதை ஸ்திரப் படுத்தும் சிகிட்சைகள் உள்ளன. ஆனால் அதை பல மருத்துவர்கள் கையாள்வதில்லை. கருப்பையை அகற்றுவதினால் வரும் பிரச்சனைகள் பற்றி பிறிதொரு கட்டுரையில் காண்போம்!
.................................................சஹானா தாஸ்.

எழுதியவர் : சஹானா தாஸ் (22-Nov-14, 8:25 pm)
பார்வை : 276

மேலே