பாரதியிடம் ஒரு விண்ணப்பம்

பாரதியே ! எங்கள் பாட்டுடைத் தலைவா !
உனது சிந்துநதிக் கனவுகளை கொஞ்சம் கடன் தருவாயா?
தீய கனவுகளெல்லாம் நனவுகளாகி நாங்கள் நலிந்து போய் விட்டோம் !
நிலை கேட்ட மனிதரை பொறுக்காத நெஞ்சம் தருவாயா?
நாங்கள் அந்த விஷயத்தில் மகா பொறுமைசாலிகள் ஆகி விட்டோம்!

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமை இன்னும் மாறவில்லை?
நல்ல வீணைகளை புழுதியில் எறியும் பழக்கம் இன்னும் போகவில்லை?
பெரிதாக உண்டியல்கள் வைத்து நிறையவே வசூலித்து -
பள்ளித்தலங்களை மட்டும் கோவிலாக்கி விட்டோம்!

வெள்ளிப்பனிமலை மீதுலாவும் கால்களை தருவாயா ?
நோயுற்ற எங்களுக்கு தினமும் "மார்னிங் வாக்" போகணும் !
அச்சம் இல்லை அச்சம் இல்லை என்னும் உன் முழக்கத்தை
உச்சத்தில் முழங்குவது சமுதாயத்தை சீர் கெடுக்கும் பாவிகள் மட்டும் !

பாரதியே ! நீ சென்று நூற்றாண்டு ஆகிறது !
அந்த பராசக்தியிடம் எங்களுக்காக இனியும் ஒருமுறை
உன் தீப்பிடிக்கும் சொற்களால் எடுத்து சொல்வாயா ?
எங்கள் இளம் தளிர்களாவது அக்கினி குஞ்சுகளாகட்டும் !

எழுதியவர் : ஜி ராஜன் (11-Dec-14, 1:57 pm)
பார்வை : 89

மேலே