உயிருக்குள் உயிர்

நேரிசை வெண்பா :

ஊர்க்குநிழல் புள்ளினம் உண்டுறைய ஊணுறையுள்
ஆர்த்தவுயிர்க் காற்றுநல்கும் ஆலமரம் - நீர்காத்து
யார்நெஞ்சும் வேண்டா நிழலணிந்(து) ஓங்கிவளர்
கார்புல்லில் வேர்கொள்ளும் காண்.

புள்ளினம் - பறவைகள், ஊணுறையுள் - ஊண் உறையுள், ஊண் - உணவு, ஆர்த்த - மிகுதியான, கார் - கருமை, கார்புல் - பனை.

பொருள் :

பரந்து விரிந்த ஓர் ஆலமரம் ஊரிலுள்ள மக்களுக்கும் அவர்கள் வளர்க்கும் விலங்குகளுக்கும் வெயிலில் இளைப்பாற பெருநிழலையும் பறவைகள் உண்பதற்குக் கனிகளையும் தங்குவதற்கேற்ற இடத்தையும் மற்ற மரங்களைவிட மிகுதியான உயிர்க்காற்றையும் தரும். இத்தகைய ஆலமரமானது நிலத்தடி நீரைக் காத்து உயரமாய் வளர்ந்து பிறர் தங்கிச் செல்வதற்கு இயலாத நிழலைத் தருகின்ற பனைமரத்தில் வேரூன்றி வளர்வதைப் பாருங்கள். செல்வச் செழிப்போடு வாழும் பெருமுதலாளிகளை எளிய கைகள் தாங்குகின்றன. தாங்கி நிற்கும் எளியோர்க்கு முதலாளிகள் சிலர் பெருநிழலாகவும் வாழ்கின்றனர். இயற்கை சொல்லும் பாடம் எப்போதும் விந்தைதான்.

(கரு/ரு/உ0ருசா)

எழுதியவர் : இதயம் விஜய் (27-Jun-25, 1:46 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 15

மேலே