ஆதலால் கடன்-வித்யா
ஆதலால் கடன்....???-வித்யா
கடன் அன்பை முறிக்கும்...........
அன்பென்பது உண்டெனில்
கடனென்பது அர்த்தமற்றது
சூழ்நிலை வஞ்சனைகளில்
வாக்குகள் கைதியாக
காலத்தாமதங்கள்
நாணயம் தவறியவனாய்
வட்டிகளைப்
பிரசவித்துக்கொண்டிருக்கிறது
கடன்காரன் மனைவி
சூடிடும் பூக்கள்
வண்ணமிழந்து
வாசமிழந்து போவதில்
ஆச்சரியமில்லை
வசைச் சொற்களில்.......!!
வறுமைக் கோட்டின்
படிதான்டாத பத்தினிகளின்
படுக்கை என்னவோ
மல்லிகை அலங்காரக்
கட்டிலென்பதுபோல்
கைகாட்டி அழைக்கிறது
வட்டி போடும் குட்டி
கண்ணுக்கெட்டிய காததூரம்
வரை யாருமில்லை
உறவென்று
கந்துவட்டிக்காரன்
காரிய நிமித்தம்
காவல் காக்கிறான்
குடும்பத்தோடு
சொர்க்க யாத்திரை
நடுத்தரங்களின்
கண்ணீர் தீர்த்தம்....!!
அவனுக்கு வயதுவந்த
பெண்ணும் இருக்கிறதாம்...!!