விண் தாண்டிச் சென்றேன்

சட்டென்று - புது
சக்தி கிடைத்தது!

ஐம்பூதங்கள் செங்குத்து வரிசையாய்,
முதுகுத் தண்டினூடே ஊடுருவியதை
சிலிர்ப்பால் உணர்ந்தேன்.

ஐம்பூதங்களும் உணர்ந் திருந்தேன்
ஆகாயம் தவிர்த்து – ஆதலால்
ஆகாயம் செல்ல ஆயத்தமானேன்.

தீடீரென,
அசரிரீ : சக்தியின் கெடு
ஒருமணி காலமென்றது.

முதல் கட்டம்- புவி உயிர்களுக்கு

ஐந்து அம்சங்களும்
அளவான முறையில்
வளமான வாழ்க்கை
கொடுக்க வேண்டி,
உயர் அதிகாரிகள்
மும்மூர்த்திகளிடம் ஒப்படைக்குமாறு
பிரம்மன் வழி
மனு செய்துவிட்டு,

செல்லும் வழியில்………

இன்னிசை கேட்டது.
இசைதிசை சென்றேன்.
ஆம்! – தேவலோகமது.
ரசிக்க நேரமில்லை.

சற்று தொலைவில்…………

ஒரு மாளிகை
இரு வாயில்கள்.
விவரம் கேட்டேன்
ஒன்று – சொர்க்கம்
மற்றொன்று – நரகம்.
உள்ளே செல்ல
அனுமதி இல்லை.
கைகுலுக்கி நகர்ந்தேன்.

இனி எங்கு செல்ல
திசை தெரிய வில்லை.

நல்ல வேளை
நாரதர் வருகிறார்
செவ்வாய் செல்ல
வழி கேட்டேன்?
இதோ…….. வழி!......
கை காண்பித்தார்
பேச நேரமில்லை
நன்றி சொல்லி நகர்ந்தேன்.

இரண்டாம் கட்டம் : எனக்காக

செவ்வாயில் நுழைந்தேன்,
நல்ல வரவேற்பு.
பூமிபோல் இல்லையங்கு
கிரகத்தின் ஆளுமை
ஒரேயோரு ஏலியன்
ஏனையோர் குடிமக்கள்.
சில மணித்துளி
அளவளா வினேன்
காலம் கருதி,
முன் பணமாக
கரண்சி நோட்டுகள்
பல கொடுத்து,
நிலவின் இடம்கேட்டு
இடம் பெயர்ந்தேன்.

நிலவில் குளிர்!
திங்க ளரசன்
ஞாயிற்றிட மிருந்து
ஒளி பிச்சைகேட்கும்
அந்நேரம் வளர்பிறை!

வணங்கி விட்டு……

சந்தமாமா, வடைப்பாட்டி
நலமாவெனக் கேட்டேன்?
நலமென்றார்.
நான் வந்த நோக்கம்கூறி
நகைகள் பல கொடுத்து
கைக் கடிகாரம் பார்த்தேன்.
காலக்கெடுவின் மீதி
ஐந்து மணித்துளியே!!

விரைந்தேன் என்இடம் நோக்கி………

ஐந்து நிமிடம் நிசப்தம்………….!!!

வெற்றி!!! வெற்றி!!! வெற்றி!!!
கையுயர்த்திக் கத்தினேன்.
என்ன வெற்றி யென.,
தட்டி எழுப்பினாள் அம்மா…

அப்பாவிற்காக -
செவ்வாயில் ஓர் இடமும்,
அம்மாவிற்காக –
நிலவில் ஓர் இடமும்
விலைபேசி விட்டு
வந்துள்ளே னென்றேன்.
குடும்பமே சிரித்தது!!
அவர்களுடன் சேர்ந்து நானும்!!!

எழுதியவர் : கவிக்கண்ணன் (27-Dec-14, 3:05 pm)
பார்வை : 174

மேலே