அந்த வார்த்தை ..........


ஒரு வார்த்தையில்
உலகம் இருண்டு விடுகிறது.
சூடேறிய கண்கள்
செந் நிறமாய்
வெம்மையை உமிழ்கிறது.
இதனிலும்
நரம்புகள் புடைத்து நிற்க
இதயம் மார்புக் கூட்டின் வெளியே
வந்து விழுகிறது.
அழுது விடலாம் எனினும்
ஒழுகிய மரபு
பரிகசிக்கும் .
வேதனையில்
ஒரு நெருப்புக் குழம்பு
உள்ளேயே பெருகி குமுறுகிறது .
ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில்
இடறி விழுந்தவன்
இன்னும் தனது இயலாமைகளை
முகம் காட்டா தபடிக்கு
மறைக்கவே நேர்கிறது .
காலம் அரித்துப் போன வண்டல்களாய்
சேகரம் ஆகும்
உன், என் இருப்பு
எதை சொல்கிறது ......
செரிக்க முடியாத வார்த்தைகளை
செப்பநிடவே
வாழ்க்கை திணிக்கப் பட்டிருக்கிறது போல
ஒரு ராத்திரியில்
ஆழ்ந்த உறக்கத்தில்
கனவுகளில்
வழிந்தோடும் இவற்றை
ஒரு வார்த்தை
கூட்டி வந்துவிடும் பயமெனக்கு
எனவே
ஒரு வார்த்தை ,அது
வேண்டாமெனக்கு .....

எழுதியவர் : இனியவன் (22-Apr-11, 12:23 pm)
சேர்த்தது : iniyavan
Tanglish : antha vaarthai
பார்வை : 464

சிறந்த கவிதைகள்

மேலே