எழுத நினைத்த வரலாறு
"அம்மா, ஊருக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்மா?”, தூக்கம் கசியும் கண்களை கசக்கிக்கொண்டே கேட்டாள் ஐந்து வயது ராதா.
“அதோ பாரு, நாம போற இடமெல்லாம் கூடவே வருது பாரு சந்தாமாமா, அது மறைஞ்சு பெருசா சூரஜ் மாமா வந்தவுடனே நம்ம ஊரு வந்துடும் ராதக்குட்டி, இப்போ நீ நல்ல புள்ளையா, இந்த ரொட்டியை சாப்பிட்டு தம்பிப்பாப்பா மாதிரி படுத்து தூங்கனும் சரியா?” நிலவைப்பார்த்து கண்விரிய சிரித்த தன் மகளின் கன்னங்களை கிள்ளியவாறே ரொட்டியை ஊட்டி விட்டாள் மீராபாய்.
“ம்ம், சாப்பிடறேன், ஆனா நீ பாட்டுப்பாடினாதான் நான் தூங்குவேன்”தனது குட்டி ஆட்காட்டி விரலை நிமிர்த்தி ஆணையிட்டு வாய் திறந்தாள் ராதா.
மீராபாய் ஒரு இளம் விதவை. பலராம் பிறந்த மூன்று மாதங்களிலேயே அவளது கணவன் ஒரு சாலைவிபத்தில் இறந்துவிட்டான். பலராம் நல்லபடியாக பிறந்தால் குடும்பத்தோடு ராமய்யா கோவிலுக்கு வந்து தரிசப்பதாக அவர்கள் வேண்டிக்கொண்டிருந்தனர். கணவன் இறந்த தீட்டை கழித்து ஒரு வருடத்திற்கு பிறகு இப்போதுதான் கோவிலுக்கு போய்விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறாள்.
கிடைத்த இரண்டு இருக்கைகளில் ஒன்றில் இரண்டு வயது பலராம் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். ராதாவை மடியில் உட்கார வைத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு உயிருருக பாடத்துவங்கினாள் மீரா. ராதா பிறந்த புதிதில் , கணவனுக்கும் தனக்கும் இடையில் படுக்க வைத்து அவளது நெற்றியை கணவன் தடவ, ஒவ்வொரு இரவும் மீரா ஆனந்தசாகரத்தில் நெஞ்சம் நீந்த பாடிய அதே பாடல். இன்று அதே பாடல் அவள் முகத்தை கண்ணீரால் நனைத்திருந்தது. பாடி முடித்த போது ராதாவும் நன்றாக தூங்கியிருந்தாள்.
ராதாவை தனது இருக்கையில் படுக்கவைத்துவிட்டு முகம் கழுவ சென்றாள் மீரா. கழுவுமிடத்தை அடைந்த போது வண்டியின் வேகம் குறைவது போல் தெரிந்தது. தூக்க மயக்கத்தினால் அவ்வாறிருக்கலாம் என முகம் கழுவிவிட்டு , கழிவறை சென்று திரும்பிய போது வண்டி முற்றிலுமாக நின்றிருந்தது. வெளியே பலரும் நடமாடுவது போன்றொரு சச்சரவு.
யாராயிருக்கும் என காண கழிவறையை ஒட்டிய கதவைத்திறந்த மீராவை, வலிமையான ஆண்கரம் ஒன்று உள்ளே தள்ளி கதவை இழுத்துச் சாத்தியது. நிலைகுலைந்த மீரா அந்த ஒரு கணத்திலும் தள்ளியவன் முகத்தை கண்டிருந்தாள். நீண்ட தாடியும், சிவந்த கண்களும், கடும் கோபத்தையும் சுமந்திருந்தது அந்த முகம்.
சடார், சடாரெனெ அத்தனை கதவுகளும் , ஜன்னல்களும் சாத்தப்பட்டன. மூடப்பட்ட கதவுகளையும் மீறி சச்சரவு சத்தம் அதிகமாயிருந்தது. மீரா தனது இருக்கையை அடைந்து போது பலராமும், ராதாவும் எழுந்து உட்கார்ந்திருந்தனர். ஒடிச்சென்று அவர்களை அணைத்துக்கொண்டாள். மற்ற பயணிகளும் இப்போது எழுந்திருந்தனர். ஓரிருவர் கதவை பலவந்தமாக திறக்க முயன்றனர். முடியவில்லை. பலராம் அழத்துவங்கிய அதே நேரம்… வெளியிலிருந்து ஒரு பெரும் குரல்..
“அல்லாஹூ அக்பர்………."
தொடர்ந்து ஒரு மயான அமைதி, உள்ளேயும் வெளியிலும்.. கலவர முகத்தை அணிந்துகொண்டிருந்த பயணிகளில் ஒருவர் துணிந்து கூவினார்
“ஶ்ரீராமச்சந்திர மூர்த்திக்கீ ஜே.. ஜெய் ஶ்ரீராம்….”
ஒரு குரல் பல குரல்களாயின. இரு முழக்கங்களும் இரவின் நிசப்தத்தை கிழிக்கத்துவங்கியிருந்த அந்த நொடியில், அந்த இரயில் பெட்டிகளின் வெளியே,
ஒருவருக்கொருவர் கைகோர்த்துக்கொண்டு உடைக்க முடியாத ஒரு மனிதச்சங்கிலியாய் , மனித அரணாய், “அல்லாஹூ அக்பர்” என்று கோஷம் எழுப்பியபடி அந்த இரயில் பெட்டிகளை பாதுகாத்துக்கொண்டிருந்த குல்லா அணிந்த தாடிக்காரர்களில் ஒருவன், தனக்கு எதிரில் சற்று தூரத்தில் பெட்ரோல் கேன்களும் தீப்பந்தங்களோடும் நின்றிருந்த கூட்டத்தை பார்த்து உரக்கக் கூவினான்..
“நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது, ஆனால் இந்த இரயில் பெட்டிகளில் இருப்பவர்கள் எங்கள் சகோதரர்கள், எங்கள் சகோதரிகள், எங்கள் குழந்தைகள். இவர்கள் மீது சிறு கீறல் ஏற்பட்டாலும் அது எங்கள் பிணங்களின் மீதுதான் நடக்கும். இது அல்லாவின் மீது ஆணை. தைரியமிருந்தால் முன் வரவும்”
பெட்ரோல் கேன்களோடும், தீப்பந்தங்களோடும் வந்திருந்த கூட்டம் அல்லாஹூ அக்பரும் ஜெய் ஶ்ரீராமும் இரண்டறக் கலந்து விட்டிருந்த காற்றை சுவாசித்தபடி பின்வாங்கத்துவங்கியிருந்தது.
------------------------------------------------------------------------------------
"மாற்று வரலாறு" என்ற அருமையான யோசனைக்காக தோழர். கவிஜிக்கு நன்றிகள்.