வலையில் வந்த வினை

கவலையின் பிடியில் வலிநீக்கிய அறிமுகம்
வலைவழி முகிழ்த்த மதிமயக்கிய புதுமுகம்
நிலையில் நில்லாது தடுமாறிய தென்மனம்
விலைகொடுத்து வாங்கிய துன்பத்தின் ஆரம்பம்!

கரம்பிடிக்க ஆளில்லை ஆறுதலாக வந்தவளைப்
புறந்தள்ள துணியாது இளமைவேகம் கொண்டாடக்
குறும்புப் பேச்சோடு தொடங்கிட்ட சிலிர்ப்புகளை
விரும்பி ஏற்றதனால் வந்ததொல்லை ஏராளம்!

ஆசை வார்த்தையோடு அவசர உதவியென்று
காசுபணம் கேட்டபோது மறுத்துப்பேச மனமில்லை
கொஞ்சுமொழி சிணுங்கலில் வாயடைத்து விட்டபோது
நாசவேலை இதுவென்று நல்லறிவு சொல்லவில்லை!

சிறிதளவில் தொடங்கிய பிடுங்கல் போக்கு
தொடர்கதையாய் நாளும் பெருகி வளர்ந்திட
நச்சரவத்தின் பிடியில் சிக்குண்ட கிளிபோல
நானிங்கு தவிக்கின்றேன்; விடுபடவே நினைக்கின்றேன்!!

எழுதியவர் : குழலோன் (18-Feb-15, 11:24 am)
பார்வை : 66

மேலே