காதல் வந்தால் சொல்லி அனுப்பு

நேசத்தை சொல்ல நெருங்கி வருகையில்
கோப முள் கொண்டு என்னை தாக்கினாய்
வலிகள் அதிகம் தந்தாய் எனக்கும்
அதை உரமாய் மாற்றி தந்தேன் உனக்கும்
அழ வைத்தாய் என்னை நீயும்
அதை நீராய் பாய்ச்சினேன் உன்னில் நானும்
இறுதியாய் என் மீது கருணை காட்டினாய்
புரிந்து கொள்ள ஏனோ மறுத்தாய்
கோடை வெயிலுக்கு நான் நிழல் வேண்டி இருந்தால்
ஆல மரம் ஒன்றை வளர்த்திருப்பேன்
காதல் மலரை நான் விரும்பியதாலே
ரோஜா செடியினை நட்டு வைத்தேன்
வசந்தம் ஒரு நாள் வந்தே தீரும்
உன்னில் காதலும் பூவாய் மலரும்
மலர்ந்தால் சொல்லி அனுப்பு
அதை பறித்து செல்ல வர மாட்டேன்
அது உதிர்ந்து விழவும் விட மாட்டேன்
அதை காக்கும் பூங்காவலனாய் இருப்பேன்
இந்த மண்ணில் நான் வீழும் வரை....!!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (26-Mar-15, 12:14 am)
பார்வை : 164

சிறந்த கவிதைகள்

மேலே