உறவுகள்

அம்மா-
சோறூட்ட அழைத்த
நிலாவும் பூச்சாண்டியும்
அப்படியேதான் உள்ளன -
நான்தான் வளர்ந்துவிட்டேன் !
*****************************************
அப்பா-
அழுததை
நான் பார்த்ததில்லை !
சில நேரங்களில்
மௌனமாய் இருப்பதை
பார்த்திருக்கிறேன் !
********************************************
பாட்டி -
தாய்மையின்
மூலக் கதையென்றால்
மனைவி -
மறுமொழியாக்கமோ ?
*********************************************
தாத்தா -
முகத்தில் அப்பாவின்
சிறுவயதை பார்க்கிறேன் !
***********************************************
குழந்தைகள் -
என் காலடிச் சுவடுகளை
சிலசமயம் அழித்து விட்டும்
சிலசமயம் அவற்றின் மேல்
தம் சுவடு பதித்தும் விளையாடுகின்றனர் !
*********************************************************
நண்பர்கள் -
என்னின் வெவ்வேறு
பரிணாமங்களில் திரிகிறார்கள் !
**********************************************************
குரு -
மீளா தூக்கத்துக்கு
தயாராகும்போது
செவிகளில் மந்திரம் ஓதும்
மனசாட்சிதான் !
கேட்டதும் கேட்காமலிருந்ததும்
நான்தான் !
**************************************************************