உறவுகள்

அம்மா-
சோறூட்ட அழைத்த
நிலாவும் பூச்சாண்டியும்
அப்படியேதான் உள்ளன -
நான்தான் வளர்ந்துவிட்டேன் !

*****************************************

அப்பா-
அழுததை
நான் பார்த்ததில்லை !
சில நேரங்களில்
மௌனமாய் இருப்பதை
பார்த்திருக்கிறேன் !

********************************************

பாட்டி -
தாய்மையின்
மூலக் கதையென்றால்
மனைவி -
மறுமொழியாக்கமோ ?

*********************************************

தாத்தா -
முகத்தில் அப்பாவின்
சிறுவயதை பார்க்கிறேன் !

***********************************************

குழந்தைகள் -
என் காலடிச் சுவடுகளை
சிலசமயம் அழித்து விட்டும்
சிலசமயம் அவற்றின் மேல்
தம் சுவடு பதித்தும் விளையாடுகின்றனர் !

*********************************************************

நண்பர்கள் -
என்னின் வெவ்வேறு
பரிணாமங்களில் திரிகிறார்கள் !

**********************************************************

குரு -
மீளா தூக்கத்துக்கு
தயாராகும்போது
செவிகளில் மந்திரம் ஓதும்
மனசாட்சிதான் !
கேட்டதும் கேட்காமலிருந்ததும்
நான்தான் !

**************************************************************

எழுதியவர் : ஜி ராஜன் (25-Apr-15, 7:42 am)
Tanglish : uravukal
பார்வை : 481

மேலே