உறவு சத்தம்

கரு இரவில் காதல் பெருகிட
கண் அசைவில் உருவான கருவே…….!
ஒரு துளியில் புதைந்த
ஓர் அணு……..!
ஒரு லட்சம் நரம்பாய்
மெருகோடி மெய் தரித்து…….!
பனிக்குடத்தில் மிதந்த
பரம்பொருளின் அதிசியமே…….!

கருவறையில் நீ உருவெடுத்தாய்
கசப்பெனும் வாய்சுவையை
உன் அன்னைக்கு அளித்தாய்…….!
குமட்டலாய்…….!
நெருடலாய்…….!
அவஸ்தையாய்…….!

குறைந்தது அவள் தேகம்
குவிந்தன வாழ்த்துக்கள்…….!
நா சுவைக்கு புளிப்பாய்
நல் மாங்கனி கேட்பாள்……..!
திரைமறைவில் திருடித்தின்பாள்
மெய் கெடும் ஊறுகாயை.......!
கேட்டால், நீ கேட்டாய் என்பாள்…….!

மயக்கத்தால் தள்ளாடுவாள்
மனச்சோர்வென்று உறங்கிடுவாள்……!
மாதங்கள் சில கழிந்து
மடியில் நீ என்றதும்…….!
மகிழ்ச்சியாய் கொண்டாடுவாள்
மன நெகிழ்வுடன் உணர்வாள்…….!

உறவுகளை திசைதிருப்ப
உன் மேல் பழி போட்டு
உடல் அசதி என்பாள்…….!
உன் உறவின் வருகையே
உண்மை உறவென
உள்ளத்தில் நினைத்திடுவாள்…….!

மாதங்கள் நகர்ந்திட
மாற்றங்கள் உன்னிடம்…….!
கை கால் முளைத்திட
களிப்படைவாள்
கருவறையில் உள்ள உன்
பிம்பத்தை கண்டு……!

நீ உருவான மாதத்தை
தளிர் விரலால் கணக்கிட்டு
நீ வெளியுறும் நாளினை
நல் வெகுமதியாய்
நினைவு கொள்வாள்……!
அன்னை என்ற பட்டத்தை
அன்பாய் ஏந்திட
அமைதியாய் ஏங்கிடுவாள்……!

அன்றைக்கு உயிர் கொடுத்த
உன் அன்னைக்கு உயிர் கொடுத்து…….!
அழுகையுடன் வெளியில் வந்தாய்
அனல் கொண்ட அகிலத்தை கண்டாய்…….!

பூ உலகில் வீழ்ந்தாய்
சேவை மனம் கொண்ட
செவிலியரின்
செம் மலர் கைகளில்…….!

ங்ஆ ங்ஆ ங்ஆ வென்று சத்தம்
உனை படைத்த பிரம்மனுக்கு
நீ சொல்லும் முதல் நன்றிச்சத்தமாய்……!
இன்று முதல் உனை காக்கும்
இறைவனுக்கு நீ சொல்லும்
முதல் ஓங்காரமாய்……!

உன் அன்னைக்கு
மழலை சத்தமாய்......!
உலகிற்கு உயிர் சத்தமாய்....!
எனக்கும் என் மனைவிக்கும்
தாத்தா, பாட்டி எனும்
உறவுச் சத்தமாய்.....!

என் மருமகள் அனந்தலட்சுமி ஓர் அழகான ஆண் குழந்தையை சனிக்கிழமை (18-4-2015) அன்று மாலையில் பெற்றேடுத்தாள் தாயும்சேயும் நலம்
*************************************************************************************************************************

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (26-Apr-15, 5:01 pm)
Tanglish : uravu sattham
பார்வை : 164

மேலே