ஓர்ந்தே சிரிப்பாள் மகிழ்ந்து – இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

தந்திரமா அல்ல துவிருந்தா என்றேதான்
விந்தையாய்ப் பேத்தி வினவும்போ – தெந்தனது
உள்ளத்தில் தோன்றும் உவகையில் கன்னத்தைக்
கிள்ளி மகிழ்வேனே நான்! 1

தந்திரமாய்க் கேட்டாலும் வேடங்கள் போட்டபடி
வந்தாலும் பேத்தி நிவேதிதா – எந்நேரம்
பார்த்தாலும் சிந்தை மகிழவே பாவனையாய்
ஓர்ந்தே சிரிப்பாள் மகிழ்ந்து! 2

குறிப்பு:

சென்ற ஆண்டு 31.10.2014 ல் இலண்டனின் 'ஹௌன்ஸ்லோ மேற்கு' என்ற ஊரில் மகன் வீட்டில் தங்கியிருந்த பொழுது, Hallowin day என்று மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாளில் என் பேத்திகள் மதுமிதா, நிவேதிதா இருவரும் வேடமிட்டு அவர்களின் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று "Trick or Treat' என்று கேட்பார்கள். அவர்கள் உடனே பயந்தது போல மகிழ்ந்து இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்கள். அன்று எடுத்த புகைப்படமும், பாடலும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-15, 10:32 pm)
பார்வை : 89

மேலே