இரண்டாம் பக்கம்

கல்லூரி தொடங்கி சில நாட்கள் ஆகியிருக்கும்.அறிமுகங்களும் அரட்டைகளும் ஆங்காங்கே நட்பாய் கருவுறத் தொடங்கின நேரம்,வழக்கம் மாறாமல் ஒரு மாலை இடைவேளை முடிந்து வகுப்பறையை நெருங்கிய சமயம் இரவினிடையே தோன்றும் வெளிச்சம் ஒன்று என் கண்களை பரிக்க தலை சாய்ந்து யாரவள் என்று பார்த்தேன்.

இதழ் பிரிக்காத ஒன்று மலர் இருக்கையில் அமர்ந்திருக்க ஏதும் பேசமால் மெளனமாய் பாதை தொடர்ந்தேன்.அன்றைய தினம் முழுதும் அவள் நினைவே நித்திரை வரை நீண்டது. எப்படியாவது அவள் மெளனம் பேசும் வார்த்தைகள நான் கேட்க வேண்டும் என் எண்ணி நண்பர்களிடம் விசாரித்தேன்.



அவளைத் தவிர அவளை பற்றிய செய்திகள் அனைத்தும் வானில் பறக்கும் காற்றாடியாகவே தோன்றியது எனக்கு, எனினும் அவள் விழி சிந்தும் பார்வை சாரலில் நான் நனைய வேண்டும் என முடிவு செய்தேன் ,பெயரறியா பூவைப் பற்றி தேடிய திசைகளெல்லாம் தென்றல் வீச அவள் வகுப்பறை சென்று அவளுக்கே தெரியாமல் அவளை ரசிப்பது என் வழக்கங்களில் புது பழக்கமானது.பல உறவுகள் நட்பால் உருவாவது இயல்பு,என் நெருங்கிய நண்பர்கள் மூலம் என்னவள் தொலைபேசி எண் கிடைக்க எங்கள் உறவின் முதல் உரையாடல் தொடங்கியது.

அவளுக்கு நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதிலும் கிடைத்தது.அவளின் ஆவல் நான் யார் என அறிவதையும் ,அவள் எண்கள் எனக்கு கிட்டியது எவ்வாறு என்பதை பற்றியுமே இருந்தது.ஒன்றிரண்டு அறிமுகங்களுக்கு பிறகு என்னுடைய ஒவ்வொரு குறுஞ்செய்தியையும் மென்படுத்தி கவிதை வடிவில் அவள் விழி சேர்க்க தொடங்கினேன்.

என் சில கவி வரிகளை படித்து தான் உன் கவிதைகளால் காற்றில் மிதக்கும் மேகமாகிறேன் என அவள் சொன்ன போது நானே மிதப்பது போலிருந்தது.அறிமுகம் ஆனாலும் என் முகம் காண எண்ணி உன்னைப் பார்க்க வேண்டும் என்றாள்,எனக்கும் ஆசைதான் அவளிடம் நேரில் பேச,ஏனோ தயக்கம் எனினும் சரி என்றேன்.



நகரும் நொடிகள் ஒவ்வொன்றும் என் நாடி துடிப்பை அதிகரிக்க கல்லூரி கால வேளை நிறைவு பெறக் காத்திருந்தேன். அலங்கரித்த பூமாலையுடன் பல்லக்கில் ஆடி வரும் கன்னி சிலையாய் அவள் நடந்து வர அவளை பின்தொடர்ந்து நடந்தேன். அவள் நடந்த காலடி தடங்களில் எல்லாம் நான் தொலைத்து சென்ற என் மனதை தேடிக் கொண்டே சென்றேன்,

சில அடிகள் முன்பே அவளிருந்தும் அழைக்க தயங்கி தவித்தேன்.உடன் வந்த நண்பன் அவள் பெயர் சொல்லி அழைக்க ,எனக்காகவே காத்திருந்தாற் போல சட்டென திரும்பி அவளது மழலை குரலில் என் பெயரை சொல்லி நீதானா என கேட்டாள்,எனக்கே என் பெயர் பிடித்தது அன்று தான்.

மொழிகளறிந்த ஊமை போல் நின்றேன்,பின்னர் அவளை நலம் விசரித்து பேச துவங்கினேன்,சில நிமிட வழக்க உரையாடல் தான்,ஆனாலும் உயிர் உறைந்த கணமாய் உள்ளத்தில் பதிந்த நிமிடங்கள் அவை.மறுநாள் எப்போதும் போல் வகுப்பு வாசலில் நின்றிருந்தேன்,



சற்றே தொலைவில் என் முகம் கண்டவுடன் இதழ் பிரிக்காமல் பெண்மை சிந்தும் புன்னகை கொள்ளையழகு ,அதனை ரசிக்கவே காலை வேளையில் அவள் வருகின்ற கல்லூரி பேருந்திற்காக காத்திருப்பேன். அவள் மேனிக்கேற்ற வண்ண ஆடை அணிந்து ,சின்ன கண்களால் என் உயிரை பரித்து எடுத்து அழகான முகத்தில் நெற்றிப் பொட்டிருப்பாள்.

மெளனங்கள் மட்டுமே பேசி பனிப்போன்ற ஆடையால் தீண்டிச் செல்வாள்.நேரில் பேசியது சில முறை தான், ஆயினும் தொலை பேசி செய்திகள் எங்கள் தொலைவைக் குறைத்தது.பிடித்த விஷயங்கள் முதல் நேற்று முடிந்த தினம் வரை படிப்பை தவிர பலவற்றையும் பகிர்ந்து கொண்டோம்.



முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அமர்ந்திருந்தோம்.மணம் வீசும் கூந்தலில் மல்லிகை மலர்ந்திருக்க மங்கை அவள் மறுதிசையில் அமர்ந்திருந்தாள்,அவளை மட்டுமே கவனித்தபடி நான் இருக்க திரும்பி பார்த்தாள் என்னை, அதிகம் அனுபவம் இல்லையெனினும் கை அசைவுகளாலே அவளிடம் உரையாடினேன்.

இடைவேளை நேரம் படியிறங்கி நான் செல்ல படியேறி கீழிருந்து வந்த அவள் எதிரே தயங்கி நெருங்கி நின்றாள்,அன்று பெண்ணிலவு வெண்ணிலவின் நிறத்திலேயே ஆடை அணிந்திருந்தாள்,அதற்காக இனிப்பும் கேட்டாள்.அன்றே கொடுத்திருக்க வேண்டும்ம்.

அன்று முதல் பலமுறை நாங்கள் சம நிற ஆடையை எதிர்பாராமலே அணிந்து வந்ததை நினைத்து வியந்ததுண்டு .நேரில் அவளிடம் என்றாவது நீண்ட நேரம் பேச வேண்டும் என நினைப்பதுண்டு,எனினும் ஒவ்வொரு மாலையும் தொடங்கும் குறுஞ்செய்தி உரையாடல்கள் தொடர்ந்து நீள தூங்கா இரவுகளை துவக்கிக் கொண்டேன்.என் வாழ்வில் மழைக்காலங்கள் என்றுமே தனியிடம் பெற்றது,மழைக் கால மேகங்கள் என் வாழ்விலும் பொழிந்த நாளில் என் செய்து கொண்டிருக்கிறாய் அன்பே என கேட்டேன்,



மேகம் வரமளித்த மழைத்துளிகளோடு கூடி ஊடல் கொண்டாடுகிறேன் என்றாள், அப்படியா என்று என்னுடன் என்றேன், எப்போதும் போல ம்ம்.. எனச் சொன்னாள். கவிதை கொண்டு வரும் மழையின் சாரல் அவளைத் தீண்ட இங்கு என் மனம் கரைந்து கொண்டிருந்தது.

கல்லூரி படிகளுக்கு இடையே எங்கள் கண்கள் பலமுறை எதிரொளி பதிந்து சென்றன.அன்று வானும் முகிலும் கலந்தாற் போல ஆடை அணிந்து வந்திருந்தாள், தரையிறங்கி தேவதை வலம் வர இனிப்பை காணும் சக்கரை நோயாளியாய் அவளை பார்த்திருந்தேன்.என்ன என புருவம் உயர்த்தி அழகு திமிர் அவள் செய்ய கொஞ்சம் செத்தே பிழைத்தேன். அவளிடம் நேரம் மறந்து பேச தவித்திருந்தவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.



அடுத்த மறுநாள் தீபாவளி ,அனைவரும் இன்றே பிறப்பிடம் புறப்பட்டனர். அதனால் அவள் தோழி மட்டுமே உடன் நடை பகிர்ந்தாள், பெயர் சொல்லி அழைத்தேன் நான், பேசாத புன்னகையும் பேச வைக்கும் பார்வையும் என்னை வரவேற்க அவளருகே சென்றேன், அனுபவ தோழி நல்லவள் ,என்னைக் கண்டவுடன் என்னவளை விட்டு தனியே முன் அவள்.

யாருமில்லா சாலையில் தென்னையும் தென்றலும் கவிதை பேசும் வேளையில் இளையவள் பாதை பகிர்ந்து கொண்டாள். வழக்கமாய் பேசும் வார்த்தைகள் உதிர்ந்து போக அவள் பேச துவங்கினாள், என்ன வகுப்பினை அதிகம் கவனிக்கிறாயோ, ஆம் உன் வகுப்பினை கொஞ்சம் அதிகமாய் கவனிக்கிறேன் என்றேன்.

தென்றல் திசை மாறி வீச கூந்தலை சரி செய்தபடியே எனை பார்த்து வருகிறேன் என்றாள் ,தலை அசைத்தேன். என் தோழர்களும் அவள் தோழிகளும் எங்களை கிண்டல் செய்ய உன்னால்தான் என சின்ன கோபம் அவளுக்கு. ஒரு மாலை நேரம், தொலைபேசியில் அவளை அழைத்தேன்,



அவள் தங்கும் விடுதி, சிறிய உணவகம், சில்லென்ற சாரல், ஜன்னல் அருகே நின்று அவள் என்னோடு அழைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். வார்த்தைகளை விட விழிகளையே தேடி பேசினேன். செல்ல செருக்கேற உடனிருந்த நண்பன் செல்லலாமா என தொல்லை செய்தான். அவளும் சொன்னாள் தோழன் அழைக்கிறான் துணை செல் என்று, கடந்து சென்றால் உன்னைக் காண முடியாதே. அச்சோ...நீ போய் தூங்கு என ஊடல் செய்தாள். ஒருவழியாய் புறப்பட்டு சென்றேன்.

ஒவ்வொரு உறவும் நெருக்கம் அதிகமாகும் போது ஒரு பிரிவை சந்திக்கும். தவறிய நட்பும் ,வார்த்தை கலைந்த அழைப்புகளும் எங்கள் பிரிவை உறுதி படுத்தின. அவளை கண்டும் காணாமல் பேசாமல் தவித்தே தவிர்த்தே நாட்கள் கடக்கின்றன.

எழுதியவர் : காதலித்தவன் (9-May-15, 6:29 pm)
Tanglish : irandaam pakkam
பார்வை : 361

மேலே