எண்ணித் துணிக கருமம்

சிப்பிக்குள்ளே சென்று விட்டால்
சிறைபட்டு விடுவோமோ என்றஞ்சி
சுதந்திரம் என்றெண்ணி
சேற்றிலே விழுந்த துளி
வீதியில் மிதிபட்டு வீணானது!
சிப்பியல்ல அது தன்னை
செதுக்க வந்த சிற்பி என்றுணர்ந்து
சிறப்பெய்துவோம் சில காலத்தில் என்று
சிதறாமல் பதறாமல்
சிப்பிக்குள்ளே அடைந்த துளி
முறைபட்டு முத்தாய் மிளிர்ந்தது!
வாழ்வென்பது ஒரு முறை
வாய்புகள் உண்டு வானம் வரை
வரப்பிலே நின்று பயனில்லை
வயலிலே இறங்கு
வாகை உன் அருகில்
வெற்றுரை விடுத்து வேலையைத் துவங்கு
வெற்றியின் ஊற்று உன்னடியில்!

எழுதியவர் : ஷர்மிளா ஜெ. (18-May-15, 5:00 pm)
சேர்த்தது : ஷர்மிளா
பார்வை : 552

மேலே