கலைடாஸ்கோப் பொழுதுகள்
நான்கு
சுவர்களுக்குள்
அடைக்கப்படாத
மூன்று வேலை
உணவுக்காக மட்டும்
அலைந்திருக்காத
இரண்டு கால்களால் மட்டும்
நடந்திருக்காத
ஒரு விடுமுறை நாள் மட்டும்
மகிழ்ந்திருக்காத
வட்ட வரையறையற்ற
கலைடாஸ்கோப் பொழுதுகள்
கை நழுவிவிட்டதாகவே
தோன்றுகிறது..
சில வளையல்களின்
துண்டுகளெனவே
அழுதிருந்த நேரங்கள்
எப்படியும் அழகாகிவிடும்
புழுதிக் கிளம்பி நெருங்கி
அந்தப் பேருந்து நின்று நகர
அப்பாவின் நரம்புப் பையில்
ஒரு பக்கத்தை பிடிக்க
அவ்விரல்களிலிருந்து வரும்
எள்ளுப் புண்ணாக்கு வாசத்தால்..
அரை டவுசரை கவ்வியிருக்கும்
அரைஞான் கயிற்றில் தொங்கும்
இரு சிறு இரும்பு வட்டுக்களின்
உரசலோசையில் கலந்திருக்கும்
மகிழ்ச்சியின் உச்சக்கட்டம்.
ஒத்தப் பனையக் கடந்துவரும்
பெரிய குளத்தை நெருங்க
அப்பாவின் கைகளை
இறுகப்பற்றுவதில்
என் பயமறிந்து சற்றே
அவர் நின்ற முதல் நாள்..
எனக்கு அதுவரை
வந்திருக்காத ஒரு நடுக்கம்.
மடித்த லுங்கியில்
முகம் புதைத்தக் கணம்.
கால்களை காணவில்லை
வெறும் துணியென
உணர்ந்துத் திரும்ப
பட்டாப்பட்டியோடு அவர்
குளத்தருகில்...
இங்க வாலே என்றவர்
அவரே வந்தார்..
எனது கால்கள் துடிக்க
பொதுக்கென்று தூக்கி
வீசப்பட்டேன்..
தலை நனையாமலிருக்க
காதுவரை இழுத்தொன்றை அணிந்து
நீச்சல் வகுப்பு முடித்து
ஈரமான கைகளால்
என் தோளை உலுக்கி
போலாம்பா என்று
என் மகன் சொல்கையில்...
குளம் வற்றியது
அப்பா மறைந்தார்
ஒத்த பனை விழுந்தது
அவன் விரல்களை முகர்ந்தேன்
குளோரின் நெடி..!!
--கனா காண்பவன்