காத்திருக்கும் காதலி

காதல் ஊற்றாய் நேத்திரம்
காதில் ஊதும் செவ்விதழ்
கைகள் கோர்த்திடும் மணிக்கரம்
உன்னை நினைக்கும் போதே சுகம் வரும்

என் செவிமடல் தீண்டும் உன் சுவாசம்
என் மனதினில் தென்றலாய் வீசும்
உன் இதழ் தரும் மெல்லிய முத்தம்
என் உடலினை உறைந்திடச் செய்யும்

வேல் விழியால் பேசுகிறாய்
தேன் மலரைத் தீண்டுகிறாய்
மென்மையாய் வருடுகிறாய் - என்
பெண்மையைத் திருடுகிறாய்

உன் விரலோடு விரல் சேர்த்து
உலா வர நான் காத்திருப்பேன்
உன் மார்போடு தலை சாய்த்து
உறங்கிடத் தானே பார்த்திருப்பேன்

உன் தோள் சாயும் நிமிடம்
உதிரம் உறைந்து போகும்
உன் கரம் கோர்க்கும் தருணம்
உலகம் மறந்து போகும்

என் சுவாசம் முழுவதும் நீதான்
உன் சுவாசம் கொண்டு சாய்த்தாய்
என் வாழ்வின் வசந்தம் நீ தான்
உன் விழியால் மனத்தைக் கொய்தாய்

சுற்றம் சூழ்ந்து வாழ்த்த
பெற்றோர் மகிழ்ந்து போற்ற
உன் வலக்கரம் பற்றி
மணவறை சுற்றி
உன்னவளாய் வாழ்ந்திடக் காத்து நிற்கிறேன்
உள்ளத்தில் உன் நினைவோடு பூத்து நிற்கிறேன்

- அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (25-May-15, 2:00 pm)
பார்வை : 846

மேலே