யார் அறிவார் என்னைத் தவிர

யார் அறிவார் என்னைத் தவிர

துளிதுளியாய் உன் மீது
கொண்ட காதலில்..,
நான் முழுதும் நனைந்து போனதை
யார் அறிவார்? என்னைத் தவிர.....!

வாய் மொழி மறந்து
மௌனம் மட்டுமே மொழியாய் மாற
என் மை விழிகள் உன்னோடு பேச முயற்சித்ததை
யார் அறிவார்? என்னைத் தவிர.....!

துக்கத்தில் உன் தோள் சாயவும்
கண் உறங்க உன் மடி சாயவும்
நான் கொண்ட ஏக்கத்தை
யார் அறிவார்? என்னைத் தவிர.....!

கரம் பிடித்து நடக்க நினைத்ததையும்
உன்னில் நானும் என்னில் நீயும்
இடம் மாறி வாழ ஆசைப்பட்டதையும்
யார் அறிவார்? என்னைத் தவிர.....!

காலை மாலை தெரியவில்லை எனக்கு
கால நேரம் மறந்து போனேன்
காணும் யாவரும் நீயாக இருப்பதை
யார் அறிவார்? என்னைத் தவிர.....!

நீயில்லா இடம் நரகமாகிப் போகவே,
நீ வாழும் திசை தேடி அலைகிறேன்
உன்னோடு வாழ்வதற்கு - இதை
யார் அறிவார்? என்னைத் தவிர.....!

நான் நீயாக மாறியதை
உன்னிடம் சொல்ல காத்திருக்கையில்
நீ உன் திருமண அழைப்பிதழோடு வந்ததை
யார் அறிவார்? என்னைத் தவிர.....!

அன்புடன்
நிமாவாசன்

எழுதியவர் : நிமாவாசன் (3-Jun-15, 2:31 pm)
சேர்த்தது : பூர்ணிமா
பார்வை : 121

மேலே