தவணை முறையில் தற்கொலை - I support Nandhini - ஜின்னா

தள்ளாடும் வயதிலும்
வேலைக்குப் போகிறார் தாத்தா..
வேலைக்குப் போகும் வயதிலும்
தள்ளாடிக் கொண்டிருக்கிறார் அப்பா..

விவரம் தெரியாத வயதிலும்
வித்தியாசம் தெரிந்தது அந்த சிறு பிள்ளைக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பத்து ரூபாய் விலை ஏறிய
பிராந்தியை குடித்து விட்டு
ஒரு ரூபாய் விலை ஏறிய பாலுக்கு
உண்ணாவிரதம் இருக்கிறது ஒரு கும்பல்...

கணக்கு தெரியாத வயதிலும்
கச்சிதமாய் புரிந்தது அதே பிள்ளைக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடகு கடையில் தாலி
அடமானத்தில் வீடு
பசியில் அழும் ஒரு குழந்தை
பள்ளிக்கு செல்லாமல் ஒரு குழந்தை
ஆனாலும்
குடிப்பதற்கு குறையொன்றும் வைக்காததற்காய்
மண்மேல் தெளிக்கும் இரண்டு சொட்டு மதுவில்
கீழே விழுந்துக் கொண்டிருக்கிறார் கடவுள்...

கும்மிட தெரியாத வயதிலும்
காணிக்கையின் கதை புரிந்தது
கொஞ்சம் வளர்ந்த பிள்ளைக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு
ஆனால்
அரசிற்கு மட்டும் அமோக லாபம்...

விவரமும் புரிந்தது
விளம்பரமும் புரிந்தது
வளர்ந்து விட்ட அந்த பிள்ளைக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எந்த ஜோசியக்காரனிடமும்
கேட்கத் தேவையில்லை
நீங்களே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்....
குடித்து குடித்தே
தவணை முறையில்
தற்கொலை செய்துகொள்ளும் உங்களுக்கு
"தண்ணியில கண்டம்" என்று...

---------- I support Nandhini -----------

இதை எழுத்து தளத்தில் முன்னெடுத்து தொடங்கிய
தோழர் சரவனாவிற்கு நன்றி...

எழுதியவர் : ஜின்னா (11-Jun-15, 5:28 am)
பார்வை : 312

மேலே