மலைச்சோலை மான்களும் ஒரு வைகறைப் பாடலும்

(முதுமலைக் காடு சிங்காரா மலைச்சோலைகளில் நீர்மின்திட்ட க்கட்டுமானப் பணிகளில் 90 களில் என் பார்வையின் கீழ் பணி பரிந்த லலிதா, ஜிக்கி, தொட்டம்மா, போன்ற சித்தாள்கள் எனும் சும்மாடு தேவதைகளுக்கு இக்கவிதை சமர்ப்பணம்)
*********

அவர்கள்
காட்டுப்பூக்களைச் சூடுவதில்லை
காட்டுப் பகுதியில் வாழ்ந்தாலும்
காட்டுவாசிகள் இல்லை

தூர தூரத்து ஊர்களின்
கிராமிய கவிதைகள்
வேர்வையை நம்பி
வாழ்க்கையைத் தேடி வந்தவர்கள்
*
அதோ
பாவை நிலவுகளை நோக்கி
கலவைத் தட்டுகள்
பறந்து வருகின்றன
பொன் மான்களைத் தேடி
பொதிச்சுமைகள்....
*
இவர்கள்
சனிக்கிழமையின்
வாரக்கூலியில்
ஞாயிறு வாங்கிய
கண்ணாடி வளையல்களை
திங்கட் கிழமை
நொறுக்கிவிடுகிறது

வளையல்கள் நொறுங்கும் வேளை
சிரிப்புகள் பூக்கும் அந்த
ஒப்பனையற்ற ஓவிய உதடுகளில்
தேவதைக்ள தெரிகிறார்கள்
*
வாளேந்தும்
வீராங்கனைகள் போல
வாழ்வேந்துகிறார்கள்....

கணவன்மார்கள்
மதுக்குடமேந்தி வரும்போது
மீன் வறுத்துக் கொடுப்பார்கள்.
கன்னிப்பூக்களோ
கற்பு வழக்கைப் பற்றி
கவலையே படமாட்டார்

காட்டுமரக் கிளைகளின்
கிளிகள் - அன்பு வைத்தால்
ராத்திரிக்குச் சுற்றிவரும்
கொடிகள்

மண் சுமந்து வந்தாலும்
மான்கள்! - இவர்களே அந்த
ஓய்வு கால மாளிகையின்
அணைக்கட்டுப் பாலத்தின்
அடுக்குமாடி கட்டிடத்தின்
தூண்கள்!

விபத்துக்களோடு உறவாடிக்கொண்டே
சாரக்கட்டுகளில் இவர்கள்
ஏறி இறங்கும் போது
எவரெஸ்ட் சாதனைகள் மலைக்கும்
*
கிரீடங்கள் போல
சும்மாடுகள் சூடுகிறார்கள்
சும்மாடுகளோ
சுமைகளைச் சுமக்கின்றன
கழுதைகள் போல!
*
இந்த
ஜீவ நதிகளை ஓடவிட்டே
கான்ட்ராக்டர் முதலாளிகள்
சமவெளிகளில் தோப்புகளும்
மலைச்சாரலில் மாளிகைகளும்
வாங்கிப் போட்டார்கள்.

ஓடிக்கொண்டே இருப்பது
நதியின்
வரமா? சாபமா?
*
வைகறையைப் பற்றிய
சிந்தனைகள் இவர்களுக்கில்லை;
வான் பார்த்த பூமியில்
இவர்களே வைகறைகள்

வசந்தங்களைப் பற்றிய
கனவுகள் இவர்களுக்கில்லை;
வேர்வையை வணங்கும்
மண்ணின் வனங்களில்
இவர்களே பொன்வசந்தங்கள்...! (1995)

(தரையில் இறங்கும் தேவதைகள்' நூலிலிருந்து)

எழுதியவர் : கவித்தாசபாபதி (14-Jun-15, 3:59 pm)
பார்வை : 138

மேலே