கிழிந்துபோன கனவொன்று

உறங்காத இரவொன்றை
உதறிப் பார்த்தேன்
உள்ளிருந்து சிலவார்த்தை
உதிரப் பார்த்தேன்

கறுப்போடு பலநிறத்தில்
கனமே இல்லை
கதைபோலும் கவிபோலும்
காரணம் இல்லை

இடமிருந்தா மேலிருந்தா
என்றே திகைக்க
குடமுருண்டு கொட்டியதாய்
சிதறிக் கிடக்க

பொறுமையுடன் அத்தனையும்
அள்ளிச் சேர்த்தேன்
பொருத்தியதைக் கண்டுவிட
வேகம் கொண்டேன்

புலப்படவே இல்லையெனப்
புரட்டிப் பார்த்தேன்
புதுக்கதிரும் முகம்தீண்ட
புருவம் நெளித்தேன்

கழிந்துபோன கனவதென்று
கிழக்கும் சொல்ல
கிழிந்துபோன இரவதுவாய்
ஏக்கம் கொண்டேன்

=========================================================
பி.கு . சில கனவுகள் புரிந்துகொள்ள முடிவதில்லை விடிந்தபின்.
அப்படியோர் கனவின் கவிப்பாடு.

எழுதியவர் : மீ.மணிகண்டன் (21-Jun-15, 2:15 pm)
பார்வை : 350

மேலே