என்று முடியும் இந்தக் கொடுமை

என்று முடியும் இந்தக் கொடுமை
பாவலர் கருமலைத்தமிழாழன்

கயர்லாஞ்சி மகாராட்டிர மாநி லத்தில்
கயமைக்குக் காட்டாக நிற்கும் ஓர்ஊர்
வயலினிலே தனமுழைத்தே அந்த ஊரில்
வாழ்ந்திட்ட சுரேகாஓர் தலித்துப் பெண்ணாம்
உயர்தற்குக் கல்விநல்ல ஏணி என்றே
உணர்ந்ததனால் ஓரளவு கற்றி ருந்தாள்
தயக்கத்தைத் தகர்த்தெறிந்தே கணவ னோடு
தன்சாதி கீழ்மையினை எதிர்த்து நின்றாள் !

ஆதிக்க சாதிவெறி அரக்கர் தம்மின்
அடக்குமுறை கொடுமைக்குப் பதிலு ரைக்க
சாதிமாறி அம்பேத்கார் சென்ற தைப்போல்
சார்ந்திட்டாள் புத்தமத அரவ ணைப்பில்
வீதியிலே குடிசையாக இருந்த தன்னின்
வீட்டைக்கல் வீடாக்க முனைந்த போது
மோதியுயர் சாதியர்கள் தடைகள் செய்தே
மொத்தமாக வெளியேற்ற முனைந்து நின்றார் !

வீட்டிற்கு மின்சாரம் துண்டித் தார்கள்
வீட்டினிலே வளர்த்துவந்த ஆடு மாட்டை
கேட்காமல் பலர்சேர்ந்தே தடுத்த போதும்
கேள்விமுறை இல்லாமல் ஓட்டிச் சென்றார்
வீட்டோடு விவசாயம் செய்வ தற்கும்
விட்டிடாமல் கால்வாய்நீர் தடுத்து நின்றே
கூட்டாக வயலையுமே பொதுப்பா தைக்குக்
குறிவைத்தே வன்முறையால் பறித்துக் கொண்டார் !

எதிர்த்திட்ட சுரேகாவின் குடும்பந் தன்னை
எழுபதிற்கும் மேற்பட்ட கிராமத் தார்கள்
குதித்துவந்து குண்டுகட்டாய்த் தூக்கி வந்து
குரூரமாக தெருவினிலே நிற்க வைத்து
விதிதிட்டார் அவள்மகனைத் தங்கை யோடு
விலங்கைப்போல் உறவுகொள்ள துன்பு றுத்தி
மிதித்திட்டார் ! மறுத்ததனால் அவன்உயிர் நிலையை
மிருகம்போல் நசுக்கியுயிர் பறித்துக் கொன்றார் !

இலங்கையிலே தமிழர்க்கு நடந்த போன்றே
இங்கேயும் சுரேகாவை பெற்றெ டுத்த
குலமகளைப் பகற்பொழுதில் பல்லோர் காணக்
குதறிட்டார் கூட்டாக உறவு கொண்டு
நலமாக சுயமரியா தையில் வாழ
நற்கனவு கண்டவளைக் குடும்பத் தோடு
நிலம்மீது பிணமாக வீழ்த்தி விட்டார்
நின்றெரியும் உயர்சாதி வெறித்தீ யாலே !

மதிகாண சந்திராயன் அனுப்பி யென்ன
மங்கல்யான் செவ்வாய்க்கு விடுத்து மென்ன
விதிமாற்றி வல்லரசாய் இந்தி யாவை
வியக்கின்ற படிஉயர்த்த முயன்று மென்ன
மதிதன்னில் சாதியத்தை நீக்கி விட்டு
மனந்தன்னில் மனிதத்தை பதிய வைத்துப்
புதியமாற்றம் சாதியற்ற இந்தி யாவாய்
புலராத வரையெந்த புகழும் வீணே !

( மகாராட்டிர மாநிலத்திலுள்ள கயர்லாஞ்சி ஊரினிலே நடந்த நெஞ்சை உருக்கும் உண்மை நிகழ்ச்சி )

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (30-Jun-15, 7:23 pm)
பார்வை : 464

மேலே