எங்கே இருக்கிறாய் நீ
ஆடி போனபின் ஆவணி
என் பெண்ஜாதியே
உனக்காகக் காத்திருக்கிறேன் நான்
எங்கே இருக்கிறாய் நீ ...
ஒவ்வொரு பூவாய் எடுத்தெடுத்து
சரஞ்சரமாய் கோர்த்துக்கோர்த்து
மாலை ஒன்று கட்டுகின்றேன்
மணமாலை ஒன்று கட்டுகின்றேன் - அதில்
உன் பெயரெழுத விரும்புகின்றேன் நான்
எங்கே இருக்கிறாய் நீ ...
இல்லற வாழ்க்கையை
இனிமையாக வாழ்ந்திட -இங்கே
இரவும் பகலும் - உன்
அறியாத முகம் நினைத்து
அகத்தில் காதல் கொண்டு
அணுவணுவாய் ரசித்துக் கொண்டு
நினைத்து நினைத்து உருகிக்கொண்டிருக்கின்றேன் நான்
எங்கே இருக்கிறாய் நீ ...
மாமன் பெண்பார்க்க வருவானென்று
முகம் சிவக்கும் மாலைப் பொழுதினிலே -சீவிச்சிங்காரித்து
வாஞ்சனையுடன் காத்திருக்கிறாயோ வாசலில் -இல்லை
வரும்போது வரட்டும் என்று காலதேவனை
வருடிக்கொண்டிருக்கிறாயோ
எங்கே இருக்கிறாய் நீ ...
அருகிலா தொலைவிலா
சொந்தமா சொந்தமாகப்போகும் அந்நியமா
குட்டையா நெட்டையா
கருப்பா சிவப்பா
காந்தக்கண்ணழகியா
கனிவான குரலழகியா
முன்னுக்குப் பின் முரணழகா -இல்லை
மூன்று லட்சணமும் பொருந்திய முகத்தழகா
மூத்தவளா இளையவளா
முப்பதையும் கடந்து
முன்னேறிக் கொண்டிருக்கின்றேன்
மூப்படையும் முன்
மணவாளன் என்னைக் கைப்பிடிக்க வருவாயா -என்று
உனக்காகக் காத்திருக்கின்றேன் நான்
எங்கே இருக்கிறாய் நீ...