வேண்டும் ஓர் இயந்திரம்

வேண்டும் ஓர் இயந்திரம்.....

அரிசி ஆலையின் வாசலில்
மணத்தது அவித்த நெல்மணிகள்...
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
தங்கத்தை பொடித்துப் போட்டதுபோல்...
சிறு சிறு துகள்களாய்...

எந்த நெல்மணியை
எடுத்துக் கொறிப்பது...???
காக்கைகளின் திணறல்....
எவரும் விரட்டியதாய் தெரியவில்லை..
சுதந்திரமாய் பசியாறியபடி...

அண்ணாந்து பார்க்க செய்த
பிரம்மாண்டமான அந்த இயந்திரம்
கடனாளி ஆக்கிவிட்டது
வாங்கிய முதலாளியை...
உழைத்துக் கடனை அடைக்கும்
உன்னதமான இயந்திரம்....

அகண்ட வாய் நிறைய
நெல்மணிகளை வாங்கி விழுங்கி
அழகாய்த்தான் பிரித்து போடுகிறது
அரிசியும், கருப்பரிசியும்...
நூக்கும், நொய்யும், தவிடுமாய்...
தனித்தனியாய்...

நெல்மணியை உள்வாங்கி
தரம் பார்த்து பிரிக்கும்
"கலர் சார்ட்டர்" கருவியை
கண்டு பிடித்தவன் பேரறிவாளிதான்...

நல்லவர், கெட்டவர்,
கொள்ளையர், கொலைகாரர்
இப்படி எப்படி எல்லாமோ
தரம் பிரிக்க இயலாமல்....
கண்டறியும் கருவியை
யார் கண்டு பிடித்துத் தருவார்கள்?

எவரேனும் கண்டுபிடித்தால்
அவர் பாதம் நான் சரணடைவேன்...

எழுதியவர் : சொ.சாந்தி (23-Jul-15, 10:27 pm)
பார்வை : 137

மேலே