மறுமலர்ச்சி

கண்ணிமைக்கும் நேரத்தில் கவிதைப் பாகை
கலந்தளித்து களிக்கின்ற கண்ணிமைக்கும்
விண்ணிமைக்கும் மேகத்தின் இடியைப் போல
வெடிகுண்டு நாவன்மைக் கொண்ட வர்க்கும்
தன்னிமையோ மூடாது கருத்தால் ஒன்றி
தமிழ்க் கவிதை விரும்புகின்ற நண்பீர் ! உங்கள்
எண்ணத்தில் எனையேற்ற , இங்கே யானும்
ஏறிட்டேன் ! தமிழ்வாழ்த்தி ! ஏற்பீர் ! இன்றே !
நீரோடி நிலம் தழைக்க , சேறு ஆட ,
நெற்றியிலே வியர்வையெனும் குருதி யோட
ஏராடிப் பண்படுத்தி , நெல்லை நட்டே
எந்நாளும் கண்போல் காத்திருந்து ,
போராடி நெல்லடித்து , மூடிக்கட்டிப்
போட்டிடுவான் ! ஆண்டையனின் வீட்டில் ஏழை !
வேரோடும் நிலைகொண்ட மரத்தைப் போல
வெற்றுடலால் நின்றிடுவான் ! எழும்ம்புக் கூடாய் !
கழனிவரப் பறியாதான் ! இன்னல் பட்டு
காத்திருந்து பயிர்விளைக்கான் ! ஊன்கொடுத்து
பழனியென்று , பதிநூறு தேடிச் சென்று
படைத்திடுவான் ஏர்பிடிக்கா தெய்வத்திற்கே !
கண்ணீரும் கம்பலையும் மனைவிக் கொள்ள
கந்தலுமே இலாத மக்கள் வாட
செந்நீரை வடித்தவனோ , தெய்வந் தன்னை
சேர்த்திடுவான் கொள்ளிடமாம் ஆண்டை வீட்டில் !
பன்னீரும் மனங்கொடுக்க , பட்டால் ஆடை
பளபளக்க ஏழைகளின் முகத்தில் தோன்றும் !
உண்ணுங்கள் நண்பீரே ஏழை வாழ்வும்
உயர்கின்ற வழிதன்னைக் கானுவீரே !
பஞ்சடித்து பட்டையாக்கி பாலில் விட்டு
பட்டாடை , மற்றாடை எல்லாம் நெய்து ,
பஞ்சடைந்த கண்ணோடு ஒட்டிப்போன
பாழ்வயிறு தன்னோடு முதலை , செல்வம்
நஞ்சுளத்தான் நாகத்தின் கொடியன் , பேழை
நிரப்பிடவே கொண்டடைப்பான் , ஆடையின்றி !
வஞ்சகநாய் வளம்பெருக்க ஏழை வாழ்வின்
வளத்தையெல்லாம் கழித்திடுவான் ! கொழுத்திடுவான் !
புகைவண்டித் தொடர்களோடு , வான ஊர்தி
பேருந்து வண்டிகளும் , ஆக்கி , நல்ல
வகைவகையாய் மாளிகையும் , அரண்மனையும்
வடித்திடுவான் ,சமைத்திடுவான் ! செல்வந் தன்னை
தொகைதொகையாய் முதலாளி இடம்கொடுத்தே
துலங்கிடுவான் சேர்த்திட்ட செல்வந்தன்னை !
முகையவிழ்ந்து மனம்கொடுக்கும் நாளாம் இன்று
முளைக்காதோ எனநிதம் ஏங்கி நிற்ப்பான் !
ஆலைகளும் நுண்ணறிவால் கருவிச் செய்து ,
அகம்மகிழ்ந்தோன் , வளமின்றி கருகிச் சாக ,
கூலிகளாய் , கும்பிகளும் , எரிந்தே , நோக
கொல்கின்ற பசிப்பிணியின் தொல்லை வாட்ட
மாளிகையில் இருப்பவனோ மகிழ்ந் திருக்க ,
மாடாகப் பாரினினிலே உழைத்தான் ! வாழ்வு
பாலையென ஆவதற்கா வாழ்ந்தான் ? வஞ்சப்
பாவிகளும் கொழுப்பதற்காக உழைத்தான் ! அந்தோ !
குஞ்சென்ற போதினிலும் கருணை யின்றி
கொத்துகின்ற கழுகளை விரட்டி , ஏழை
நெஞ்சறுக்க திரிகின்ற நரியின் கூட்டம்
நடுங்கிடவே , அடங்கிடவே , ஒடுங்கி வாழ ,
துஞ்சுகின்ற நண்பீரே கடை திறந்து
தோல்புடைத்துக் காட்டுங்கள் ! தூய்மை நெஞ்சால்
அஞ்சற்க ! ஆடுகின்ற புல்லர் வீழ
ஆர்ப்பரிப்பீர் ! போர்தொடுப்பீர் ! வெல்வீர் இன்றே !
கொட்டுகின்ற தேளடித்து துன்பம் தீர்க்க ,
குருதியினைக் குடிக்கின்ற நாயடிக்க ,
கட்டுகின்ற கயிறதனை அறுத்தெடுக்க ,
கடிக்கின்ற நாகத்தின் பல்பிடுங்க ,
முட்டுகின்ற காலையுடை கொம்பொடிக்க ,
முளைப்பீரே ! துளிர்ப்பீரே ! வளர்க ! போத்தை
விட்டகன்ற வேங்கையினை போலே நீவீர் ,
வெல்வீரே ! பகைகுலத்தை வாடுவீரே !
எழையுடை வாழ்வொடித்தே எத்தி வாழும் ,
எத்தரினை எத்தனைநாள் விட்டு வைப்பீர் ?
மோழைகளை , முதுகின்பின் வாளைக் காட்டும்
மூடரினை எத்தனைநாள் துளிர்க்கச் செய்வீர் ?
கோழைகளாய் ஆகாமல் , ஏழைப் பாழை
கொடிறுருத்து வாழ்கின்ற பாவியோரை
நாழிகையும் தயங்காமல் நாடி , நரம்பை ,
நலங்கெடவே கொயவீரே ! பாரின்மீதே !
ஒருவனுமே உணவின்றி வாடல் கண்டால்
ஒழித்திடுவோம் , அழித்திடுவோம் , உலகை என்று
கவிஞனுக்கு குருவானேன் புரட்சிப் பாட்டால்
கூறிட்டான் , சீரிட்டான் , வறுமைக் கண்டே !
பெருமைகளாய் பல்லோர்கள் வேடமிட்டு ,
பதுக்களையும் , கடத்தலையும் ,கறுப்பில் வாங்கும்
சிறுமையினை புரிகின்றார் ! சீர்மைக் கெட்டு !
செல்கின்றார் பாரினிலே மானங்கெட்டு !
உத்தமனாய் நடக்கின்ற உலுத்தர் தம்மை
உலுக்காமல் , வேரோடு வெட்டிச் சாய ,
வைத்திடுவோம் ! பட்டமர பேரை சூட்டி !
வதக்கிடுவோம் கிள்ளிவிட்ட கீரைப் போலே !
தைத்திடுவோம் முள்ளாக ! கிழிந்த ஆடை ,
தைத்தால்போல் எழையுடை வாழ்வை ! தைப்போம் !
கைத்தலத்தில் இருக்கின்ற வலிமை தன்னை
காட்டிடிடுவோம் சமுதாய புரட்சி ஒங்க !
ஐந்தாறு பேர்களுக்கா ஆலை சாலை ?
அல்லார்கள் மாள்வதற்கா ? தந்தை காந்தி
தந்தார்கள் விடுதலையைப் பெற்றே ! இன்று
தவிப்பதற்கா ? இல்லைவிதை முளைப்பதற்கா ?
வெந்துமனம் கருகுதற்கா ? வாழ்வில் மேன்மை
விளைவதற்கா ? அறியோமே மாறுபாட்டை !
எந்தமனம் எழையுடை வாடல் தன்னை
ஏற்றிடுமோ ? நண்பீரே புதுக்கு வீரே !