அங்கே தொலைந்த நிழல்

காத்திருந்த மரநிழல்,
நூற்றியெட்டு கதைகள் சொல்லும் !
உன்னோடு இருந்த நேரங்களைவிட,
உனக்காக காத்திருந்தது மிக அதிகம் !
உடனிருந்தது அதன் நிழல் !
உனக்காகவே தனித்து அழுத பொழுதும்,
உனையெண்ணி உட்கார்ந்து சிரிக்கையிலும் !
சங்கடப்பட்ட சமயங்களில்,
உன்னைவிடவும் வேகமாய்,
என் வேதனைகளை கிரகித்தது அது !
தனிமைப்பட்டு அழுந்தி அமர்ந்த பொழுதுகளில்,
மருந்தாய் வீசியது அதன் இதமான காற்று !
வருகிறேன் என்று நீ வாக்குறுதி தந்து,
சொற்ப சமயத்தில் வராது போனபோதும்,
தளராதே என இலைகள் உதிர்த்தது !
கரம்கோர்க்க மறுத்து புறம்பேசி போனாலும்,
சிரம்போல எனக்காக உறங்காமல் காத்திருந்தது !
நிறம் மாறிப்போகிற நாட்களில்,
நிலைகுலையும் மானுடவேட்கையில்,
தரம் மாறாமல் தகுதிகுன்றாமல் நின்றதது !
பணிநிமித்தம் சுமைகளின் அழுத்தம் !
துண்டாடப்பட்டு எங்கெங்கோ நீயும் நானும் !
என்றாலும் உன்னைவிடவும்,
அம்மரத்திற்கு ஏங்குகிறேன் நான் !
நிஜமாய் நானோ என் நிழலான அகமோ,
தொலைந்தது உன்னிடமல்ல !
ஆத்மார்த்தமாய் அன்பு வீசிய அம்மரத்திடம் !
பச்சை குடைபிடித்து பெற்றவளாய் காத்த அவ்வரத்திடம் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (1-Aug-15, 9:20 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 97

மேலே