இன்னிசை இருநூறு - இரண்டாவது அதிகாரம் – அறம் - பாடல் 7

தினையளவும் ஈசன் செயல்கடப்பார் யாரே
மனையே பொருளே மகவேயா தானும்
வினையா லிழப்பினும் மேவினும் பன்னோய்
இனையா தறனியற்ற லின்பு. 17

பதவுரை:

தினையளவும் - சாமையென்னும் தானிய மணியின் அளவாகக் கூட

ஈசன் - பரம்பொருளாம் இறைவனின்

செயல்கடப்பார் யாரே - கருத்தால் விளையும் செயல்களுக்குத் தப்புகின்றவர்கள் யாருண்டு? யாருமில்லை;

மனையே, பொருளே, மகவே,- வீடு, பொருள் போன்ற செல்வமாகட்டும் அல்லது மக்கட் பேறேயாகட்டும்

யாதானும் - இவைகளில் ஏதாகிலும்

வினையால் - இறைவனது செயலால்

இழப்பினும் மேவினும் - இழக்க அல்லது பெற நேர்ந்தாலும்

பன்னோய் – ஆராய்ந்து நினைந்து நினைந்து

(பன்னுதல் - ஆராய்ந்து செய்தல் அல்லது நின்று நின்று பேசுதல் என்ற பொருள் உள்ளது)

இனையாது - வருந்தாமல்

அறனியற்றல் இன்பு - தாம் செய்ய வேண்டிய தர்மத்தின்பாற்பட்ட நல்ல காரியங்களைச் செய்து வருவதே இன்பம் தருவதாகும்.

பொருளுரை:

சாமையென்னும் தானிய மணியின் அளவாகக் கூட,பரம்பொருளாம் இறைவனின் கருத்தால் விளையும் செயல்களுக்குத் தப்புகின்றவர்கள் யாருண்டு? யாருமில்லை; வீடு.பொருள் போன்ற செல்வமாகட்டும் அல்லது மக்கட் பேறேயாகட்டும் இவைகளில் ஏதாகிலும் இறைவனது செயலால் இழக்க அல்லது பெற நேர்ந்தாலும், ஆராய்ந்து நினைந்து நினைந்து வருந்தாமல் தாம் செய்ய வேண்டிய தர்மத்தின் பாற்பட்ட நல்ல காரியங்களைச் செய்து வருவதே இன்பம் தருவதாகும் என்கிறார் இப்பாடலாசிரியர் அரசஞ் சண்முகனார்.

விளக்கவுரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ் சண்முகனார் (19-Aug-15, 2:49 pm)
பார்வை : 107

மேலே