நான் காதலன் நீ காதலி
காதலனாகத்தான் இருக்கிறேன்..
காதலிக்கான இடம் மட்டும் நிரப்பப்படாமல்..!
என் வாழ்க்கை திறந்த பாலைவனமாக
வரண்டு கிடந்தபோது
மலர்ந்த ஒற்றை ரோஜா நீ..!
அன்று நான் உன்னை கண்டேன்..!
விடை தெரியாமல் சுற்றியலைந்த
வாழ்வினில் தமிழ் எழுதிய
கவிதை நீ..!
அன்று நாம் பேசிக்கொண்டோம்..!
நெடுநாள் வெடித்ததிருந்த பூமியில்
வந்து விழுந்த சில்லென்ற
மழைத்துளி நீ..!
அன்று என்னுள் காதல் பூத்தது..!
மழைத்துளியை திருடிய சிப்பி
முத்தொன்றை உயிர்ப்பித்தது..!
அன்று நான் என் காதலை
உன்னிடம் சொன்னேன்..!
உலகெல்லாம் சுற்றிய பட்டாம்பூச்சி
தன் மலரை கண்டு சேர்ந்தபோது..
தனிமையில் வாடிய
மூங்கில் ஒன்று புல்லாங்குழலாகி
தேவாரம் வாசித்தது..!
அன்று நாம் காதலர்களானோம்...!
சேர்ந்து நடந்த நிழல்கள்
உடலோடு காவியம் பேசிக்கொண்டிருக்க..
திசை மாறிய சூரியணால்
நிழல்களும் தடுமாறின..!
அன்று காலம் நம்மை பிரித்தது..!
காற்றில் ஊசலாடிக்கொண்டிருந்த
கிளையைப் பிரிந்த இலையொன்று
மண்ணைச் சேர்ந்தது
அதன் விருப்பம் கேட்கப்படாமலே..!
அன்று நீ மற்றொருவனின் மனையாளினி..!
மலர்ந்த ஒற்றை ரோஜா
சிதறி விழுந்தபின் பூந்தோட்டம்
மறுபடியும் ஆனதொறு
பாலைவனம்..!
இன்று..
நான் காதலனாகத்தான்
இருக்கிறேன்..
காதலிக்கான இடம் மட்டும்
நிரப்பப்படாமல்..!
- பாரதி