உலகை உலுக்கிய வாசகங்கள் நூல்ஆசிரியர் முதுமுனைவர் வெ இறையன்பு, இஆப iraianbuhotmailcom நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி,

உலகை உலுக்கிய வாசகங்கள்
நூல்ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,

தந்தி பதிப்பகம், 86-A, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7.
பேச : 044 25303000, 432 பக்கங்கள், விலை : ரூ. 200.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,



மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக லட்சக்கணக்கான மாணவ, மாணவியரை சந்தித்து தன்னம்பிக்கை விதை விதைத்து வரும் சிறந்த பேச்சாளர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர், பன்முக ஆற்றலாளர், முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், தினத்தந்தி நாளிதழில், ஞாயிறு தோறும் எழுதி வந்த, ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’ தொடர் தந்தி பதிப்பின் மூலம் அழகிய நூலாக வந்துள்ளது. நேர்த்தியான அச்சு, அழகிய வடிவமைப்பு, பொருத்தமான ஓவியங்கள் என படிக்க சுவை கூட்டுவதாக உள்ளது, பாராட்டுக்கள்.


தொடராக எழுதி வந்த போதே அவற்றை மின்னஞ்சல் குழுக்களுக்கும், முகநூலிலும், வலைப்பூவிலும் பகிர்ந்து வந்தேன். பலரின் பாராட்டைப் பெற்ற தொடரை மொத்தமாக நூலாகப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி.


‘உலகை உலுக்கிய வாசகங்கள்’ படித்தால், படித்த வாசகரின் மனதையும், உலுக்கி விடுகின்றது. ஒரு புத்தகம் என்ன செய்யும்? என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்த நூல் படிக்கும் முன் இருந்த மனநிலைக்கும், படித்து முடித்த பின் உள்ள மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் வெற்றி.


தகவல் களஞ்சியமாக உள்ளது. பல்வேறு தகவல்களை ஒரே நூலில் அறிந்து கொள்ள முடிகின்றது. பத்து நூல்கள் படித்த மனதிருப்தி ஒரு நூலில் கிடைக்கின்றது. வாசகர்களுக்கு தகவல் விருந்தாக நூல் உள்ளது. "போர்த்தொழில் பழகு" நூலைப் படித்து விட்டு, மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் மனதார பாராட்டினார். இறையன்பு அவர்களின் நூல் படித்தால் ஞானியாகலாம் என்றார். இந்த நூல் படிக்க, அவர் இல்லையே என்ற வருத்தம் என் நினைவிற்கு வந்தது. ஆனால் தினத்தந்தியில் தொடராக வந்த போது அவசியம் படித்திருப்பார்.


102 வாரங்கள் வெளிவந்த தொடர் மொத்த நூலாகப் பார்த்ததில் பிரமிப்பு. அட்டைப்பட வடிவமைப்பும் மிக நன்று. பொது அறிவு வளர்த்துக் கொள்ள உதவிடும் அரிய நூல். போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் கேள்வி-பதில், பொது அறிவு நூல்கள் மட்டும் படிக்காமல் இது போன்ற பொது அறிவு வளர்க்கும் நூலை அவசியம் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டும். ஒரே ஒரு நூலில் இவ்வளவு செய்திகளா? என்று பிரமித்து விட்டேன்.


இந்த ஒரு நூல் எழுதுவதற்காகவே நூலாசிரியர் வெ. இறையன்பு அவர்கள் எத்தனை நூல்கள் படித்து இருப்பார் என்பதை எண்ணிப் பார்க்க வியந்தேன். நேர்மையான அரசு உயர் செயலராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியத்தில் ஈடுபடுவது, எழுத்து, பேச்சு இருபெரும் துறையில் தனி முத்திரை பதித்து வருவது பாராட்டுக்குரிய சாதனையாகும். ‘இயங்கிக் கொண்டே இருங்கள்’ என்று எனக்குச் சொன்னவர் அவர். அவரும் இயங்கிக் கொண்டே தான் அடுத்தவரையும் இயங்கச் சொல்கிறார்.


‘ஆழமாக வாசிப்பது அறிவை வளர்க்கும்' இந்த நூலின் முதல் கட்டுரையின் தலைப்பு. இந்த நூலையும் ஆழமாக வாசித்தால் அறிவு வளர்க்கும் என்று அறுதியிட்டுக் கூறலாம். ‘உலகின் முதல் புரட்சியாளர் புத்தர்’ பகுத்தறிவின் இலக்கணம் சாக்ரட்டீஸ், அலெக்சாண்டரின் கல்லறை வாசகம், இப்படி நூலின் தலைப்பே கட்டுரையை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளன. பல்வேறு உலகப்புகழ் ஆளுமையாளர்களின் சிறப்பை, பண்பை, ஆற்றலை, கட்டுரைகளின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார்கள்.


நூலில் இருந்து பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு : பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நூல்கள் படித்து பகுத்தறிவாளன் ஆனவன் நான். பெரியாருக்கு முந்தைய மேல்நாட்டு பகுத்தறிவாளர் சாக்ரட்டீஸ் கட்டுரை படித்து வியந்தேன். அதில் இருந்து சில துளிகள் :


7). பகுத்திறிவின் இலக்கணம் சாக்ரட்டீஸ் !


" எனக்கு எதுவும் தெரியாது என்பது தெரியும், எந்த நூலும் எழுதாத ஒரு மனிதன், உலகில் இன்றும் பகுத்தறிவின் இலக்கணமாக உதாரணம் காட்டப்படுகிறார் என்பதும், எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்திய முதல் மனிதர் அவரே என்பதும் நினைக்கையில் சிலிர்க்க வைப்பது. கிரேக்கத்தில் விழுந்த அந்த விதை, மேற்கத்திய சிந்தனை மரபை விருட்சமாக விரிவாக்கியது.


சாக்ரட்டீஸ் முரண்பாடுகளை முன் வைத்தார். அது மக்களின் சிந்தனையை சிதற வைத்துக் கல்லெறிந்து சலன வட்டங்களை எழுப்பின. அவருடைய வாதமுறை சாக்ரட்டீஸ் வழிமுறை என்று பெயர் பெற்றது."



இக்கட்டுரை படித்த போது தந்தை பெரியாரும் என் நினைவிற்கு வந்தார். அவரும் முரண்பாடுகளை முன் வைத்து பகுத்தறிவை தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வந்தார். ஒரு நூல் படிக்கும் போது அது தொடர்பான மற்ற தகவலும் நம் நினைவிற்கு வர வைப்பது நூலாசிரியர் வெ. இறையன்பு அவர்களின் வெற்றி.


மேநாட்டு அறிஞர்கள் பற்றி அவ்வளவாக அறிந்திராத தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் அரிய விருந்தாக உள்ளது. கவலை என்ற நோய் தீர்க்கும் மருந்தாகவும் நூல் உள்ளது. மனக்கவலையோடு உள்ளவர்கள் இந்த நூல் படித்தால் மனக்கவலை நீங்கி மனம் மகிழ்ச்சி அடையும் என்று உறுதி கூறலாம்.


கணினி யுகத்திலும் நூல் படிக்கும் இன்பத்தை உணர்த்திடும் நந்நூல் இது. பதச்சோறாக மற்றோரு கட்டுரை.


நம்பிக்கையே வாழ்க்கையின் திறவுகோல்.


தாம்பத்யம் என்பதே, கணவன் தன்னை மனைவிக்குள்ளும், மனைவி தன்னை கணவனுக்குள்ளும் தேட முயற்சி செய்யும் பயணமே! தேடத் தயாராக எப்போதுமிருப்பவர்கள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள். உயிர்ப்புடன் இல்லாதவர்கள் சலிப்புடன் இருக்கிறார்கள். நம்பிக்கை வைத்தால் நாய் கூட வாலாட்டுகிறது. சந்தேகப்பட்டால் சருகு கூட சிராய்க்கிறது. நம்பிக்கை துரோகிகளைக் கூட இளக வைத்து விடும். சந்தேகம், ஆருயிர் நண்பர்களைக் கூட எதிர்முகாமில் இணைத்து விடும். நம்பினால் இருட்டில் கூட சிறிது நேரம் தடுமாறும் விழிகள், பின் பழக்கப்பட்டு விடுகின்றன. விரல்களே இருளில் நமக்கு விழிகள்.

நல்லது என எண்ணி உண்டால் நஞ்சும் உரமாகிறது.
நல்லவர் என எண்ணி அணுகினால் நட்பும் வரமாகிறது.


கணவன் மனைவி இருவரும் நூலில் உள்ள இந்த வரிகளை உணர்ந்து வாழ்ந்து வந்தால் வாழ்க்கை இனிக்கும்


நூலாசிரியர் வெ. இறையன்பு அவர்கள், முதலில் கவிஞர், பிறகு தான் எழுத்தாளர் என்பதை உணர முடிகின்றது. . கட்டுரையில் கவித்துவம் மிளிர்கின்றது. சிற்பி சிலை செதுக்கும் நுட்பத்துடன் செதுக்கி உள்ளார். தேவையற்ற ஒரு சொல் கூட இன்றி தேவையான சொற்களை மட்டும் எழுதி தகவல் விருந்து வைத்துள்ளார்.


காதல், அன்றும், இன்றும், என்றும் மகிழ்வான ஒன்று. காதல் பற்றியும் நூலில் எழுதி உள்ளார்கள்.


74. காதல் என்னும் பரவச உணர்வு !


"கண்டவுடன் காதலே காதலன்றோ – கிறிஸ்டோபர்!


மார்லோ உலகத்தை இயக்குவது காதல் என்னும் அதிசய சக்தியே. புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் விழியீர்ப்பு விசை அதிக சக்தி வாய்ந்தது. அதனால் தான் நெருப்பில் நிமிர்ந்து நிற்பவர்கள் கூட விழிகளின் வீச்சில் விழுந்து விடுகிறார்கள். காதலே நம் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. காதல் என்னும் பரவச உணர்வு இல்லாமல் கதையோ, காப்பியமோ, கவிதையோ சாத்தியமில்லை. மென்மையாக இருப்பதாலேயே அது வலிமையாகவும் இருக்கிறது. உயிர்ப்போடு இருக்கிற எதுவும் மென்மையாகத்தான் இருக்கும்."


இந்த நூல் பல்சுவை விருந்தாக உள்ளது.


காதல், தத்துவம், வாழ்வியல், நேர்மை, வலிமை, தன்னம்பிக்கை, விடுதலை, வெற்றி, வீரம், அன்பு என அனைத்தையும் கற்பிக்கும் நூலாக உள்ளது. திருக்குறளில் பாடாத பொருள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பாடி உள்ளார் என்போம். நூலாசிரியர் வெ. இறையன்பு அவர்கள் எழுதாத விசயமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து விசயமும் எழுதி உள்ளார்.


அவருடைய முந்தைய நூல்களின் சாதனையை அவரது அடுத்த நூலே முறியடிக்கும் என்பது உண்மை. "போர்த்தொழில் பழகு" நூலின் சாதனைய "உலகை உலுக்கிய வாசகங்கள்" நூல் விற்பனையில் சாதனையை முறியடிக்கும். நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். நான் எழுதியது யாவும் உண்மை என்பதை உணர்வீர்கள்.


வாழ்வியல் நெறி கற்பிக்கும் நூல் .அறம் சார்ந்த ஒழுக்கமான வாழ்க்கை வெற்றி தரும் என்பதை போதிக்கும் நூல் .மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் .அன்பால் எதையும் சாதிக்கலாம் ,பகைவனுக்கும் தீங்கு செய்யாதே என் பகரும் நூல் .


432 பக்கங்கள் உள்ள அழகிய நூலை ரூபாய் 200 என்று குறைந்த விலையிட்டு வெளியிட்ட தந்தி பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள். வெ.இறையன்பு அவர்கள்தான் கூறுவார்கள்."புத்தகத்தின் விலையை யாருமே கொடுக்க முடியாது .தாளுக்கும் அச்சுக்கும்தான் விலை." என்று .அது போல இந்த நூலிற்கும் விலை தரவில்லை . தாளுக்கும் அச்சுக்கும்தான் தந்துள்ளோம் என்பதை உணர்ந்தேன். மலிவு விலையில் மாபெரும் தகவல் களஞ்சியம் .

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (6-Sep-15, 1:55 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 2931

சிறந்த கட்டுரைகள்

மேலே