காலை நேரக் காற்றிலே

காலைநேரக் காற்றிலே துயில்எழுந்த மாட்டிலே
சாலைதூங்கும் நேரத்தில் சத்தமில்லா வேளையில்
காலைவீசி நடப்பது மிகமிக உற்சாகமே!
வேலைவிடுத்த பின்னரே மிகவும்அது சாத்(தி)யமே!

மென்காற்றில் மிதந்துவரும் வேப்பமர வாசமே
முகர்ந்தபின்னே சுகம்அடையும் என்னுடைய சுவாசமே.
தெருஓரம் தூங்கும்நாய் தலைநிமிர்த்திப் பார்த்திடும்.
தெரிந்தமுகம் இதுவென்று திரும்பதூங்கப் போய்விடும்

விதவிதமாய் நிறஜாலம் விண்வெளியில் நேர்ந்திடும்
இதமான இளஞ்சூட்டில் என்குளிரும் நீங்கிடும்.
அடுக்குமாடி கட்டிடங்கள் அனைத்தின்வாசல் வெளியிலே
வீடுகாக்கும் காவலர்கள் விழித்துக்கூட்டம் போடுவார்.

வானிலின்னும் ஆதவன் வரவிருக்கும் வேளையில்
தேநீர்கோப்பை ஏந்தியே தினம்தினமவர் பேசுவார்
நள்ளிரவினில் குளிர்நீக்க அவரெரித்த குப்பைகள்
சுள்ளிகளின் சிறுபுகையின் வாசம்காற்றில் வீசுமே.

முகம்மூடும் மேகத்திரை மெல்லமெல்ல விலக்கியே
மெதுவாக இரவிஎழ இரவின்இருள் நீங்கிடும்.
சந்திக்கும் மூன்றுதெரு எங்கெங்கி ருப்பினும்
தொந்தியுடன் அங்கிருப்பார் விக்னவி நாயகர்.

சிலைதன்னைத் தாண்டிச்செல்லும் மக்கள் அனைவரும்
தலைதிருப்பி வாய்முணுத்து வந்தனங்கள் சொல்லுவார்.
கன்னம்தொட்டு கரணமிட்டு செல்லுவோரும் சிலருண்டு.
அனைவருக்கும் ஆசிதந்து அமர்ந்திருப்பார் பிள்ளையார்.



.

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (17-Sep-15, 2:00 pm)
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே